கரும்பு பயிர்களை நாசம் செய்யும் காட்டு பன்றிகள்


கரும்பு பயிர்களை நாசம் செய்யும் காட்டு பன்றிகள்
x
தினத்தந்தி 8 May 2023 6:45 PM GMT (Updated: 8 May 2023 6:46 PM GMT)

மூங்கில்துறைப்பட்டு பகுதியில் கரும்பு பயிர்களை காட்டு பன்றிகள் நாசம் செய்து வருகின்றன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி

மூங்கில்துறைப்பட்டு,

மூங்கில்துறைப்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள சவேரியார்பாளையம், மேல்சிறுவளூர், வடபொன்பரப்பி, வடக்கீரனூர், பிரம்மகுண்டம், மணலூர், அருளம்பாடி, பாக்கம், கானாங்காடு, கடுவனூர், பவுஞ்சிப்பட்டு உள்பட பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் அதிக நிலப்பரப்பில் கரும்பு சாகுபடி செய்து பராமரித்து வருகின்றனர். பயிர்கள் நன்கு செழித்து வளர்ந்துள்ளதால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள காப்புக்காடு பகுதியில் இருந்து வெளியேறும் காட்டுபன்றிகள் கூட்டம் கூட்டமாக வயல்களுக்குள் புகுந்து அங்கு சாகுபடி செய்யப்பட்டுள்ள கரும்புகளை நாசம் செய்து வருகின்றன. இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளதால் அவர்கள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.

பன்றிகளை விரட்ட முடியவில்லை

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ஒரு ஏக்கருக்கு ரூ.70 ஆயிரத்துக்கு மேல் செலவு செய்து கரும்பு பயிர்களை சாகுபடி செய்து பராமரித்து வருகிறோம். இந்த நிலையில் எங்கள் வயல்களுக்குள் காட்டு பன்றிகள் கூட்டம் கூட்டமாக வந்து பயிர்களை நாசம் செய்து வருகின்றன. வெடி வைத்து பன்றிகளை விரட்ட முயற்சி செய்தோம்.

ஆனால் அவைகள் வெடிக்கும் அஞ்சாமல் கரும்பு வயலுக்குள் புகுந்து எங்களது பயிர்களை தொடர்ந்து நாசம் செய்து வருகிறது. ஆட்கள் மூலமாகவும் விரட்ட முடியவில்லை. இதனால் கரும்பு பயிர்களை எவ்வாறு காப்பாற்றுவது என்பது தெரியாமல் நாங்கள் பரிதவித்து வருகிறோம். காட்டு பன்றிகளால் எங்களது பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதால் எங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதை தவிர்க்க வயல்களுக்குள் காட்டு பன்றிகள் புகாமல் இருக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Next Story