ஆடு, மாடுகளை அடைக்க கால்நடை பட்டி அமைக்கப்படுமா?

ஆடு, மாடுகளை அடைக்க கால்நடை பட்டி அமைக்கப்படுமா?
திட்டச்சேரியில் விளைநிலங்களை சேதப்படுத்தும் ஆடு, மாடுகளை அடைக்க கால்நடை பட்டி அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
2 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள்
நாகை மாவட்டம் திட்டச்சேரி வருவாய் கிராமங்களுக்குட்பட்ட 2 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் உள்ளது. இந்த விளைநிலங்களில் சம்பா, தாளடி என இரண்டு போகம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த விளைநிலங்களை கால்நடைகள் சேதப்படுத்தாமல் இருக்க 10 ஆண்டுகளுக்கு முன்னர் தலையாரிகள் நியமனம் செய்யப்பட்டு பயிர்களை சேதப்படுத்தும் கால்நடைகளை பிடித்து அடைக்க பெருமாள் மேலவீதியில் கால்நடை பட்டி இருந்து வருகிறது. இந்தநிலையில் கடந்த 10 ஆண்டுகளாக கால்நடை பட்டிகள் செயல்படாமல் உள்ளது. இதனால் அண்மை காலங்களாக ஆடு, மாடுகள் விளைநிலங்களை சேதப்படுத்தி வருகிறது. அவ்வாறு சேதப்படுத்தும் கால்நடைகளை அடைக்க கால்நடை பட்டிகள் திட்டச்சேரி பகுதியில் இல்லாமல் உள்ளது. இதனால் விவசாயிகள் பயிர்களை சேதப்படுத்தும் கால்நடைகளை பிடித்து காரைக்கால் மாவட்டம் விழிதியூரில் கொண்டு போய் விடுகின்றனர்.
கால்நடை பட்டி அமைக்க வேண்டும்
இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை மனுக்கள் அளித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே கால்நடைகளை கட்டுப்படுத்தவும், விளைநிலங்களை சேதப்படுத்துவதை தடுக்கவும் திட்டச்சேரி பெருமாள் மேலவீதியில் உள்ள இடத்தில் மீண்டும் புதிய கால்நடை பட்டி அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






