அனைத்து வசதியுடன் புதிய தாலுகா அலுவலகம் கட்டப்படுமா?


அனைத்து வசதியுடன் புதிய தாலுகா அலுவலகம் கட்டப்படுமா?
x

சீர்காழியில், 5 ஆண்டுகளாக தனியார் திருமண மண்டபத்தில் செயல்படுவதால் அனைத்து வசதியுடன் புதிய தாலுாக அலுவலகம் கட்டப்படுமா? என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

மயிலாடுதுறை

சீர்காழி:

சீர்காழியில், 5 ஆண்டுகளாக தனியார் திருமண மண்டபத்தில் செயல்படுவதால் அனைத்து வசதியுடன் புதிய தாலுாக அலுவலகம் கட்டப்படுமா? என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

சேதமடைந்த தாலுகா அலுவலக கட்டிடம்

சீர்காழி புதிய பஸ் நிலையம் அருகில் பழைய தாலுகா அலுவலக வளாகம் உள்ளது. இந்த அலுவலக வளாகத்தில் தாலுகா அலுவலகம், சார்கருவூலம், கிளை சிறைச்சாலை, வட்ட வழங்கல் அலுவலகம், புள்ளியல்துறை அலுவலகம், பத்திரப்பதிவு துறை, ஊராட்சி ஒன்றிய அலுவலகம், உதவி செயற்பொறியாளர் அலுவலகம், அரசு இ-சேவை மையம், ஆதார் மையம் உள்ளிட்ட அலுவலகங்கள் செயல்பட்டு வந்தன.

இந்த தாலுகா அலுவலகம் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பழமையான கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது. இந்த அலுவலகத்தில் போதிய அடிப்படை வசதிகள் இன்றி கட்டிடங்கள் சேதம் அடைந்தது.

இடமாற்றம்

இதை தொடர்ந்து தாலுகா அலுவலகம் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சீர்காழி பிடாரி தெற்கு வீதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டது. இந்த வளாகத்தில் கழிப்பிட வசதி, குடிநீர் வசதி. வாகனங்கள் நிறுத்தும் இடம், ஓய்வறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் உள்ளது. இதனால் தாலுகா அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

மேலும் போதிய இடவசதி இல்லாததால் குறுகிய இடத்திலேயே தாலுகா அலுவலகம், வட்ட வழங்கல் அலுவலகம், தேர்தல் பிரிவு, புள்ளியல் துறை, சமூக நலத்துறை உள்ளிட்ட அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் காரணமாக பணி செய்யும் பணியாளர்களும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். தற்போது தாலுகா அலுவலகம் தனியார் திருமண மண்டபத்தின் மேற்கூறையில் அமைக்கப்பட்ட அட்டைகள் பெயர்ந்து கீழே விழுகின்றது.

புதர் மண்டி கிடக்கிறது

இதன் காரணமாக அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அலுவலகத்திற்கு வரவே அச்சப்படுகின்றனர். மேலும் இந்த திருமண மண்டபத்தை சுற்றிலும் செடி, கொடிகள் மண்டி புதர் போல் காணப்படுவதால் பாம்பு உள்ளிட்ட விஷஜந்துக்கள் அலுவலகத்துக்குள் வந்து செல்கின்றன. இதனால் பணியாளர்கள் அச்சத்தோடு பணியாற்றி வருகின்றனர்.

எனவே சேதமடைந்த பழைய தாலுகா அலுவலக கட்டிடங்களை இடித்து அகற்றிவிட்டு, அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய தாலுகா அலுவலகம் கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

புதிதாக கட்ட வேண்டும்

இதுகுறித்து சீர்காழி நகர்மன்ற முன்னாள் தலைவர் கனிவண்ணன் கூறுகையில், சீர்காழி தாலுகா அலுவலக கட்டிடம் கடந்த சில ஆண்டுகளாக குடிநீர், கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் செயல்பட்டு வருகிறது. இதனால் இந்த தாலுகா அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் கடும் இன்னலுக்கு உள்ளாகி வருகின்றன. குறிப்பாக பெண்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

புதிதாக தாலுகா அலுவலகம் செயல்படும் கட்டிடத்தின் மேற்கூரை அவ்வப்போது பெயர்ந்து கீழே விழுவதால் அலுவலர்கள் அச்சத்துடன் பணியாற்றி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக பழைய தாலுகா அலுவலக கட்டிடத்தை இடித்து அகற்றி விட்டு புதிதாக அனைத்து அடிப்படை வசதிகளுடன் தாலுகா அலுவலகம் கட்டித்தர வேண்டும் என்றார்.


Next Story