நடிகர் சிவாஜி கணேசன் எழுதியதாக கூறப்படும் உயில் ஜோடிக்கப்பட்டது ஐகோர்ட்டில், மகள்கள் தரப்பில் வாதம்

நடிகர் சிவாஜி கணேசன் எழுதி வைத்ததாக கூறப்படும் உயில் ஜோடிக்கப்பட்டது என அவரது மகள்கள் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வாதிடப்பட்டது.
சென்னை,
நடிகர் சிவாஜி கணேசனின் சொத்துகளில் பங்கு கேட்டு அவரது மகள்கள் சாந்தி, ராஜ்வி ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரித்து வருகிறார். இந்த வழக்கு நீதிபதி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, சிவாஜி கணேசனின் மகள்களின் தரப்பில் ஆஜரான வக்கீல் வாதிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-
அனைத்து சொத்துகளிலும் சமபங்கு உள்ளதாக ராம்குமார் முதலில் கூறியுள்ளார். அவ்வாறு கூறி சகோதரிகளிடம், சகோதரர் பிரபுவிடமும் கடந்த 2013-ம் ஆண்டு பொது அதிகார பத்திரத்தை எழுதி வாங்கிக்கொண்டார். 1999-ம் ஆண்டு எழுதப்பட்ட பதிவு செய்யப்படாத நடிகர் சிவாஜியின் உயில் 2021-ம் ஆண்டுதான் வெளிவந்தது.
ஜோடிக்கப்பட்ட உயில்
அந்த உயிலில் மனுதாரர்கள் இருவருக்கும் சொத்தில் உரிமையில்லை என கூறப்பட்டுள்ளது. உயிலின் உண்மைத்தன்மை குறித்து தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. நடிகர் சிவாஜி கணேசன் எழுதியதாக கூறப்படும் இந்த உயில் ஜோடிக்கப்பட்டது. உயில் சட்டப்படி உண்மையானது என்று சான்று பெறாததால் அது செல்லத்தக்கதல்ல.
மேலும், சொத்தில் பாகப்பிரிவினை செய்யக்கோரி கடந்த 2021-ம் ஆண்டு ராம்குமாருக்கு மனுதாரர்கள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அந்த நோட்டீசுக்கு அளித்த பதிலில்தான், 1999-ம் ஆண்டு சிவாஜி கணேசன் உயில் எழுதி வைத்துள்ளதாக முதல்முறையாக காண்பித்துள்ளார்.
முறைகேடு
சாந்தி தியேட்டரில் இருந்த சிவாஜியின் 50 பங்குகளும், தாயார் கமலாவின் 650 பங்குகளும் முறைகேடாக ராம்குமார் மற்றும் பிரபுவின் மகன்களின் பெயருக்கு மாற்றப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் வாதிட்டார்.
இவரது வாதம் முடிவடையாததால் விசாரணை இன்று (செவ்வாய்க்கிழமைக்கு) தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.






