குடிநீர், கழிவறை வசதிகள் செய்து தரப்படுமா?


குடிநீர், கழிவறை வசதிகள் செய்து தரப்படுமா?
x

குடிநீர், கழிவறை வசதிகள் செய்து தரப்படுமா?

திருவாரூர்

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வருபவர்களுக்கு குடிநீர், கழிவறை வசதிகள் செய்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கலெக்டர் அலுவலகம்

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை, மாவட்ட வழங்கல் துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபாண்மை நலத்துறை, மகளிர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. இதனால் அரசின் உதவிகள், நலத்திட்டங்கள் பெறுவதற்காக நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.

குறிப்பாக திங்கட்கிழமை தோறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுதால் அன்றைய தினம் சுமார் 200-க்கும் மேற்பட்டவர்கள் தங்களது கோரிக்கைகளை தீர்வு காண மனு அளிப்பதும் வழக்கமாக இருந்து வருகிறது. இவை மட்டுமின்றி விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம், நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம், மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம் என பல்வேறு கூட்டங்களும் நடத்தப்பட்டு வருகிறது.

குடிநீர் வசதி இல்லை

இந்தநிலையில் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி இல்லாமல் உள்ளது. இதனால் கலெக்டர் அலுவலகத்திற்கு வருபவர்கள் குடிப்பதற்கு தண்ணீர் இன்றி தவித்து வருகின்றனர்.

தரைதளம் மட்டுமின்றி 3 அடுக்கு மாடிகள் கொண்ட கலெக்டர் அலுவலகத்தில் மாடி தளங்களில் ஒரு சில இடங்களில் அலுவலர்கள், ஊழியர்கள் வசதிக்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி அமைக்கப்பட்டும், அதுவும் சரிவர செயல்படவில்லை.

கீழ்தளம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையாக செயல்பட்டு வருகிறது. இந்த தளத்தில் எந்தவித கழிவறை வசதியும் கிடையாது. இதேபோல் 3 தளங்களிலும் அலுவலர்கள், ஊழியர்கள் பயன்பாட்டிற்கு என கழிவறைகள் உள்ளன. பொதுமக்கள் பயன்பாட்டிற்கான பொதுகழிவறைகள் இல்லை. பெரும்பாலும் அதிகமான மக்கள் மனு அளிக்க வருவதால் கீழ் தளத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், கழிவறை வசதியும் செய்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கண்காணிப்பு கேமரா வசதி

இதுகுறித்து நுகர்வோர் பாதுகாப்பு மைய நிர்வாகி ரமேஷ்:-

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்திற்கு நாள்தோறும் ஏராளமான மக்கள் பல்வேறு பணிக்காக வந்து செல்கின்றனர். இவர்களுக்கு குடிப்பதற்கு குடிநீர் வசதி இல்லாமல் உள்ளது. மேலும் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் பொதுகழிவறை என்பது இல்லை. அலுவலக ஊழியர்களுக்கான கழிவறைகளும் சுகாதாரமற்ற முறையில் உள்ளது வேதனைக்குரியது. எனவே கலெக்டர் அலுவலகம் கட்டிட வளாக பகுதியில் மாற்றுத்திறனாளிகள் உள்பட அனைவரும் பயன்படுத்த கூடிய வகையில் நவீன கழிவறை கட்டிடம் கட்டித்தர வேண்டும். மேலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியும் செய்து தர வேண்டும். வாகன நிறுத்துமிடம் போதிய வசதியின்றி உள்ளது. இதனால் வாகனங்கள் வாசல்பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படுகிறது. இதில் அடிக்கடி வாகனங்கள் திருட்டு நடக்கிறது. எனவே கண்காணிப்பு கேமரா வசதி மற்றும் போதிய வசதியுடன் வாகன நிறுத்துமிடம் அமைத்து தர வேண்டும் என்றார்.


Related Tags :
Next Story