சாலையோர வியாபாரத்தை முறைப்படுத்துதல் சட்டம் முழுமையாக நடைமுறைக்கு வருமா?


சாலையோர வியாபாரத்தை முறைப்படுத்துதல் சட்டம் முழுமையாக நடைமுறைக்கு வருமா?
x

சாலையோர வியாபாரத்தை முறைப்படுத்துதல் சட்டம் முழுமையாக நடைமுறைத்த வேண்டும் என்று வியாபாரிகள் எதிர்பார்த்து உள்ளனர்.

இந்தியாவில் சுமார் 1 கோடி பேர் சாலையோர வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ் நாட்டில் சாலையோரங்கள், வாரச்சந்தைகள், கோவில் திருவிழாக்கள், சுற்றுலாதலங்கள், பஸ்நிலையங்கள், தலை சுமை மற்றும் தள்ளுவண்டியில் தெருக்களில் சென்று வியாபாரம் செய்பவர்கள் என்று சுமார் 5 லட்சம் பேர் இந்த தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். படித்துவிட்டு வேலை கிடைக்காத இளைஞர்கள், பெண்கள், சிறுபான்மையினர், பட்டியல் சமூகத்தினர், பிற்படுத்தப்பட்டோர், கைம்பெண்கள், மாற்றுத்திறனாளிகள் என்று சமூகத்தின் விளிம்பு நிலையில் உள்ளவர்கள் என்று அனைத்து தரப்பினரும் இந்த தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் கிடைக்கக்கூடிய சொற்ப வருமானத்தை வைத்துதான் அவர்கள் வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.

கந்து வட்டிக்கு கடன் பெற்று வியாபாரம் செய்யும் சாலையோர வியாபாரிகளை நிம்மதியாக தொழில் செய்யவிடாமல் உள்ளூர் ரவுடிகள் மிரட்டுவது வாடிக்கையாகிவிட்டது. இதுஒரு புறம் என்றால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது, பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது என்று உள்ளாட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் கடைகளை அப்புறப்படுத்துவது, பொருட்களை அள்ளி வீசுவது, வியாபாரிகளை தாக்குவது, வழக்கு போடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். தினசரி இப்படிப்பட்ட பிரச்சினைகளை சந்தித்துதான் அவர்கள் தங்கள் தொழிலை நடத்தி வருகின்றனர்.

பாதுகாப்பு சட்டம்

இந்த பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க, சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தொழிற்சங்கங்கள், தன்னார்வ அமைப்புகள் நடத்திய தொடர் போராட்டத்தின் காரணமாகவும், கோர்ட்டுகளில் நடைபெற்ற சட்ட போராட்டங்களின் காரணமாகவும், பிரதமர் தலைமையில் சாலையோர வியாபாரிகளுக்கான தேசிய கொள்கை உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது. அதன் பின்னரும் சாலையோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் சட்டம் இயற்ற வேண்டுமென்கிற தொடர் போராட்டத்திற்கு பின்னர் 2014-ம் ஆண்டு நாடாளு மன்றத்தில் "சாலையோர வியாபாரிகள் வாழ்வாதார பாதுகாப்பு மற்றும் சாலையோர வியாபாரத்தை முறைப்படுத்துதல் சட்டம்" இயற்றப்பட்டது.

மேற்படி சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த 2015-ம் ஆண்டு நவம்பர் 2-ல் தமிழ்நாடு அரசு செயல்திட்டம் மற்றும் விதிகளை உருவாக்கி அமல்படுத்தியது. இந்த சட்டத்தின்படி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் வியாபாரம் செய்யும் சாலையோர வியாபாரிகளை கண்டறிந்து அவர்களுக்கு அடையாள அட்டை வழங்குவது, பட்டியல் தயார் செய்வது, சாலையோர வியாபாரிகளை உள்ளடக்கிய நகர விற்பனைக்குழு அமைப்பது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.

விற்பனைக்குழு

அதன்அடிப்படையில், தமிழகத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் பெரும்பாலான உள்ளாட்சி அமைப்புகளில் சாலையோர வியாபாரிகள் கணக்கெடுக்கப்பட்டு விற்பனைக்குழுவில் இடம்பெற வேண்டிய சாலையோர வியாபாரிகளுக்கான தேர்தல் நடத்தி, மாநகராட்சி, நகராட்சி ஆணையர் தலைமையில் சாலையோர வியாபாரிகள்-6 பேர், நகர நிர்வாகத்தின் மருத்துவ அதிகாரி, நகர நிர்வாகத்தின் அலுவலர், போக்குவரத்து காவல்துறை உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகள் 2 பேர், வியாபாரிகள் சங்க பிரதிநிதி ஒருவர், அரசு சாரா நிறுவன பிரதிநிதிகள் 2 பேர், குடியிருப்போர் நலச்சங்கத்தின் பிரதிநிதி ஒருவர் என்று 15 பேர் கொண்ட நகர விற்பனைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

நகர விற்பனைக்குழு அமைக்கப்பட்டு 45 நாட்களுக்குள் விற்பனைக் குழுவின் தலைவராக இருக்கும் மாநகராட்சி, நகராட்சி ஆணையர்களால் விற்பனைக் குழு கூட்டப்பட வேண்டுமெனவும், 3 மாதத்திற்கு ஒரு முறையோ அல்லது தேவைப்படும்போதோ கூட்டங்களை நடத்த வேண்டுமென இச்சட்டம் கூறுகிறது. ஆனால், பல மாநகர மற்றும் நகராட்சிகளில் இக்கூட்டம் நடத்தப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சாலையோர வியாபாரிகள் பாதுகாப்பு சட்டத்தின்படி நகர விற்பனைக்குழுவே அதிகபட்ச அதிகாரம் கொண்ட அமைப்பாகும். சாலையோர வியாபாரிகளுக்கு வியாபார சான்றிதழ் வழங்குவது, முறைப்படுத்துவது, அப்புறப்படுத்துவது, மாற்று இடம் வழங்குவது என்று சாலையோர வியாபாரிகள் சந்திக்கும் எந்த பிரச்சினையாக இருந்தாலும் நகர விற்பனைக்குழுவில் தான் முடிவு செய்ய வேண்டும்.

வியாபாரிகள் குற்றச்சாட்டு

ஆனால் திருச்சி மாநகராட்சி உள்பட சில நகராட்சிகளில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த காரணத்தால், சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை இன்னும் வழங்கப்பட வில்லை என்றும், விற்பனைக்குழு அமைக்கப்படவில்லை என்றும், அடிக்கடி சாலையோர கடைகளை ஆக்கிரமிப்பு என்ற பெயரில் அதிகாரிகள், காவல்துறையினர் அப்புறப்படுத்துவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து சாலையோர வியாபாரிகள், தொழிற்சங்கத்தினர், உள்ளாட்சி அதிகாரிகள் கூறியதாவது:-

திருச்சி மாவட்ட தரைக்கடை சங்கத்தின் செயலாளர் செல்வி:- சாலையோர வியாபாரிகள் வாழ்வாதார பாதுகாப்பு மற்றும் சாலையோர வியாபாரத்தை முறைப்படுத்துதல் சட்டம் முடிந்த மட்டும் சாலையோர வியாபாரிகள் ஏற்கனவே விற்பனை செய்யும் அதே இடத்தில் விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டுமெனவும், தவிர்க்கவே முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் மாற்று இடம் கொடுத்த பின்னரே அப்புறப்படுத்த வேண்டுமென தெளிவாக கூறுகிறது. இச்சட்டத்தை அமல்படுத்தி சாலையோர வியாபாரிகளை பாதுகாக்க வேண்டிய மாநகராட்சி, நகராட்சி, காவல்துறை அதிகாரிகளே அத்துமீறி நடந்து கொள்கின்றனர். வேலியே பயிரை மேய்வதுபோல விற்பனை குழுவை கூட்டி முடிவெடுக்க வேண்டிய அதிகாரிகள் நேரடியாக சென்று சாலையோர கடைகளை அப்புறப் படுத்துவது, பொருட்களை சேதப்படுத்துவது, காவல்துறையை ஏவிவிட்டு சாலையோர வியாபாரிகளை தாக்குவது, பொய்வழக்கு போடுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இப்படிப்பட்ட சம்பவங்கள் திருச்சியில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இதனால் சட்டம் வந்தால் சகலமும் தீர்ந்துவிடும் என்கிற எதிர்பார்ப்பிலிருந்த சாலையோர வியாபாரிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. எனவே விரைவில் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கி, விற்பனை குழுவை அமைத்து எங்கள் வியாபாரிகள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.

லால்குடியை சேர்ந்த தரைக்கடை வியாபாரி நாகராஜ்:- லால்குடியில் சுமார் 20 ஆண்டு காலமாக தரக்கடை வைத்துள்ளேன். தரக்கடை போடுவதற்கு எங்களுக்கு தனிப்பட்ட இடம் இல்லை. நாங்கள் சாலை ஓரங்களில் கடை வைத்து பிழைப்பு நடத்தி வருகிறோம். எங்களுக்கு நகராட்சியின் சார்பில் அடையாள அட்டை வழங்க போட்டோ, ஆதார் அட்டை வாங்கியுள்ளார்கள். விரைவில் அடையாள அட்டை கிடைக்கும் என்று எதிர்பார்க்கின்றோம். எப்போதும் தரைக்கடை வைக்க அனுமதி வழங்க வேண்டும்.

வணிக வீதிகள்

திருச்சியை சேர்ந்த தள்ளுவண்டி வியாபாரி சேகர்:- நடைபாதை வியாபாரிகளுக்கு, வணிகம் செய்ய கட்டிடங்கள் கட்டித்தரப்படும் என்று கூறுகிறார்கள். இது, பெரும்பான்மையான வியாபாரிகளுக்கு பலன் தராது. பொதுமக்கள் வருகையும் இருக்காது, வியாபாரமும் நடக்காது. சாலையோர வியாபாரம், பல பிரிவுகளை கொண்டது. அதனால் ஆங்காங்கு உள்ள நிலைமைகளுக்குத் தக்கவாறு அமைக்க வேண்டும். மண்டலவாரியான விற்பனை கமிட்டி அமைத்து, வியாபாரிகள் கருத்துகளுக்கு, முதலிடம் கொடுக்க வேண்டும். மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் தட்டுக்கடைகளை அனுமதிக்கலாம். தாராளமாக உள்ள வீதிகள், பெரிய தெருக்களில் உள்ள பங்க் கடைகளை பர்மா பஜார் மாடலில் அமைக்க வேண்டும். இது சாலையோர வியாபாரிகளை, சிறுகடை வியாபாரிகளாக தரம் உயர்த்தும். சில வீதிகளை, சாலையோர வணிக வீதிகளாக அறிவிக்க வேண்டும்.

முசிறி கைகாட்டியில் பூக்கடை நடத்தும் சாவித்திரி:- நான் இந்த இடத்தில் பல வருடங்களாக கடை நடத்தி வருகிறேன். முசிறி கைகாட்டி பொதுமக்கள் மற்றும் கிராம மக்கள் அதிகமாக வந்து செல்கின்ற ஒரு பொதுவான இடம். தரை கடை வியாபாரிகளுக்கு பாதுகாப்பாகவும், சவுகரியமாகவும் இந்த இடம் உள்ளது. தரைக்கடை வியாபாரிகள் அனைவருக்கும் நகராட்சி சார்பாக பதிவு அட்டை வழங்கப்பட்டிருக்கிறது. பழைய பஸ் நிலையத்தில் புதியதாக கடைகள் அமைக்கப்படுவதாகவும், அங்கு எங்களுக்கு கடைகள் தருகிறோம் என்று கூறுகிறார்கள். நாங்கள் தற்போது இருக்கிற இடத்தில் இருப்பது தான் வியாபாரம் செய்ய ஏற்ற இடமாக இருக்கும்.

சாலையோர வியாபாரிகள் சங்க தலைவர் கணேசன்:- ஊரடங்கு காலத்தில் சாலையோர வியாபாரிகளுக்கு அரசு வழங்கிய ரூ.2 ஆயிரம் நிவாரணம் அடையாள அட்டை இல்லாததாலும், நலவாரியத்தில் பதிவு செய்யாததாலும் பல சாலையோர வியாபாரிகளுக்கு கிடைக்கவில்லை. தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டு, சாலையோர வியாபாரிகள் வியாபாரம் செய்ய அனுமதிக்கப்பட்டாலும், மீண்டும் தொழில் தொடங்க போதுமான முதலீடு இல்லாமல் சாலையோர வியாபாரிகள் பலர் மாற்று வேலைக்கு சென்றுவிட்டனர். தமிழகத்தில் அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளிலேயும் சாலையோர வியாபாரிகள் பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்திடவும், நகர விற்பனைக்குழுவைக் கூட்டி முடிவெடுக்கவும், சாலையோர வியாபாரிகளை கண்ணியத்துடன் நடத்திடவும், சாலையோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை பாதுகாத்திடவும் மத்திய, மாநில அரசுகள் முன்வரவேண்டும்.

திருச்சி ஏர்போர்ட் பகுதியை சேர்ந்த சங்கர்:- பஸ் நிலையம், ரெயில் நிலையம், விமான நிலையங்கள் அருகில் அரசுக்கு சொந்தமான இடங்களில், சாலையோர வியாபாரிகளுக்காக நவீன முறையில் கடைகள் கட்டிக்கொடுப்பது அரசின் கடமை. இது கவர்ச்சியாகவும், மிக நவீனமாகவும், சுற்றுலாத்தலம் போல் அமைக்க வேண்டும். பொது மக்கள் பயன்பாட்டோடு இணைக்கப்பட வேண்டும். இதனால், வியாபாரம் பெருகும். சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும். சில லட்சங்கள் பணம், அரசு செலவு செய்தால், பல லட்சம் பேர் சுய வேலை வாய்ப்பிற்கானதாகவும், அழகாக இருக்கவும் உதவும். பொருளாதாரத்தில், சுமார் 40 சதவீதம் சாலையோர வியாபாரங்களின் மூலமே நடைபெறுகிறது.

விரைவில் அடையாள அட்டை

திருச்சி மாநகராட்சி உதவி ஆணையர் (வருவாய்) ரமேஷ்குமார்:- திருச்சி மாநகராட்சியில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சாலையோர வியாபாரிகள் 3,783 பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு இருந்தது. கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க அரசு அறிவித்த பொது முடக்கத்தினால் பலருடைய வாழ்க்கை முடங்கியது. இதனால் கட்டிட வேலை, தனியார் நிறுவனங்களில் வேலை பார்த்த பலர் தள்ளுவண்டிகளில் தெருத்தெருவாக வியாபாரம் பார்க்க தொடங்கினர். அப்போது மத்திய அரசு சார்பில் சாலையோர வியாபாரிகளுக்காக வழங்கிய கடனை மாநகராட்சியில் 7,300 பேர் பெற்றுள்ளனர். இந்தநிலையில், கொரோனா ஊரடங்கு முடிந்து பலர் தங்கள் சொந்த வேலைக்கு திரும்பிவிட்டனர். தற்போது, கோர்ட்டு உத்தரவு படி வருகிற 31-ந்தேதி வரை மாநகராட்சியில் கணக்கெடுப்பு நடத்தி வருகிறோம். இதுவரை 4,900 பேர் கணக்கெடுப்பில் கண்டறியப்பட்டுள்ளனர். கணக்கெடுப்பு முடிந்ததும் விரைவில் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கப்பட்டு, தேர்தல் நடத்தி விற்பனைக்குழு அமைக்கப்படும். அதன்பிறகு, சாலையோர வியாபாரிகளுக்கு தேவையான வசதிகள் விற்பனைக்குழு மூலம் செய்து கொடுக்க ஏற்பாடு செய்யப்படும்.

லால்குடி நகராட்சி ஆணையர் குமார்:- லால்குடி பகுதியில் 202 தரக்கடை வியாபாரிகள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் அடையாள அட்டை வழங்க உள்ளோம். அத்துடன், அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வங்கிகள் மூலம் நகராட்சியின் உதவியோடு இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட தரக்கடை வியாபாரிகளுக்கு கடன் வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. லால்குடி தரைக்கடை வியாபாரிகளால் போக்குவரத்துக்கோ பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் இருக்க நகராட்சி பணியாளர்கள் மூலமாக கண்காணிக்கப்பட்டுவருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இன்றைய சூழலில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புதிய பஸ் நிலையங்கள் கட்டுதல், ரெயில் நிலைய விரிவாக்கம் போன்ற திட்டமிடலில், சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரங்கள் பாதுகாக்கப்பட வேண்டுமென்றால், அவர்களையும் இணைத்தே திட்டமிடல் அமைய வேண்டும். அத்துடன் சாலையோர வியாபாரிகள் வாழ்வாதார பாதுகாப்பு மற்றும் சாலையோர வியாபாரத்தை முறைப்படுத்துதல் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே ஏழை எளிய வியாபாரிகள் மற்றும் பொதுமக்களின் முக்கியமான கோரிக்கையாகும்.

1 More update

Next Story