கிணற்றுக்கு கம்பி வலை போடப்படுமா?


கிணற்றுக்கு கம்பி வலை போடப்படுமா?
x

பொரணி தெற்கு காலனியில் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ள கிணற்றுக்கு கம்பி வலை போடப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

கரூர்

பயன்பாடு இல்லாத கிணறு

கரூர் மாவட்டம், தாந்தோன்றி ஒன்றியம், ஜெகதாபி ஊராட்சி, பொரணி தெற்கு காலனியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக பல வருடங்களுக்கு தோண்டப்பட்ட கிணறு ஒன்று பயன்பாட்டில் இருந்து வந்தது. அந்த கிணற்றுக்கு வந்து அப்பகுதி மக்கள் குடிநீர் எடுத்துச்செல்வர்.ஆனால் தற்போது ஆழ்துளை கிணற்று நீர் மற்றும் காவிரி நீர் ஆகியவை மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் நிரப்பப்பட்டு பொதுமக்களின் குடியிருப்பு பகுதியிலேயே குழாய் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் பழைய கிணறு பயன்பாட்டில் இல்லாமல் இருக்கிறது.

கம்பி வலை போட வேண்டும்

இந்தநிலையில் அந்த பகுதியில் நடமாடும் மற்றும் விளையாடும் சிறுவர்கள் கிணற்றின் அருகே சென்று விளையாடுவதுடன், கிணற்றை எட்டிப்பார்க்கவும் செய்கின்றனர். இதனால் எதிர்பாராதவிதமாக தவறி கிணற்றில் விழுந்து ஆபத்தில் சிக்கிக்கொள்ளும் சூழ்நிலை உள்ளது.எனவே உரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு அந்த கிணற்றுக்கு கம்பி வலை போட்டு மூடி, சிறுவர்களை ஆபத்தில் இருந்து காக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story