வெல்லும் ஜனநாயகம் மாநாடு தள்ளிவைப்பு - திருமாவளவன் அறிவிப்பு


வெல்லும் ஜனநாயகம் மாநாடு தள்ளிவைப்பு - திருமாவளவன் அறிவிப்பு
x

மாநாட்டுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் 23-ம் தேதி திருச்சிராப்பள்ளியில் 'வெல்லும் ஜனநாயகம் மாநாடு' நடைபெறுவதாக அறிவித்திருந்தோம். ஆனால், எதிர்பாராத வகையில் கடந்த 04-ம் தேதி சுழன்றடித்த கடும் புயல் மற்றும் கனமழையால், பெருக்கெடுத்தோடிய பெருவெள்ளத்தால், சென்னை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட வட மாவட்டங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டன. அங்கே இயல்பு வாழ்க்கை திரும்புவதற்கே பல நாட்கள் தேவைபட்டன.

எனவே, இக்கட்டான இந்த சூழலில் நமது மாநாட்டு தேதியை 29-ம் தேதி அன்று நடத்துவதாக மாற்றி அறிவித்தோம். அதனைத் தொடர்ந்து மாநாட்டுக்கான ஏற்பாடுகளைத் தீவிரப்படுத்திக்கொண்டிருந்த வேளையில், மீண்டும் நெஞ்சைப் பதறவைக்கும் வகையில் தென்மாவட்டங்களில் பெருமழை கொட்டிதீர்த்தது. அதனால் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், தேனி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இம்மழைக்குப் பலர் பலியாகி இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

நெல்லை தூத்துக்குடி மாவட்டங்கள் தனித் தீவுகளாக மாறியுள்ளன. சாலை போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டிருக்கிறது. குடியிருப்புப் பகுதிகளை வெள்ளம் சூழ்ந்திருக்கிறது. பல வீடுகள் முற்றிலும் இடிந்துபோய் உள்ளன சேதமடைந்துள்ளன. உணவுக்கும் குடிநீருக்கும் மக்கள் திண்டாடும் நிலை இருக்கிறது. ஏராளமானோர் ஆங்காங்கே முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடுந்துயரில் அவதியுற்று வருகின்றனர்.

தமிழ்நாடு முதல்-அமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள், அதிகாரிகள் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இப்பணிகள் இன்னும் ஓரிரு வாரங்களுக்குத் தொடரும் நிலையே உள்ளது. இந்நிலையில், நமது கட்சியின் உயர்நிலைக்குழு உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள், மண்டலப் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட முன்னணி பொறுப்பாளர்களுடன் நேற்றும் இன்றும் நடைபெற்ற இணையவழிக் கலந்தாய்வுக் கூட்டத்தில் மாநாட்டினை 2024 ஜனவரி மூன்றாவது வாரத்தில் தள்ளி வைத்து நடத்தலாம் என கூறியுள்ளனர்.

எனவே, நமது வரலாற்றுச் சிறப்புவாய்ந்த புதிய வரலாறு படைக்கவுள்ள மாபெரும் மாநாடு "வெல்லும் ஜனநாயகம் மாநாடு" இந்த மாதம் இறுதியில் நடைபெறுமென அறிவிக்கப்படுகிறது. முதல்-அமைச்சர் மற்றும் நமது தோழமை கட்சித் தலைவர்கள் ஆகிய அனைவரோடும் கலந்து பேசிய பின்னர் மாநாட்டுக்கான தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுமெனவும் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story