இலங்கையில் இருந்து மகளுடன்தனுஷ்கோடிக்கு தப்பி வந்த தம்பதி


இலங்கையில் இருந்து மகளுடன்தனுஷ்கோடிக்கு தப்பி வந்த தம்பதி
x
தினத்தந்தி 26 May 2023 6:45 PM GMT (Updated: 26 May 2023 6:46 PM GMT)

இலங்கையில் இருந்து படகு மூலம் தனுஷ்கோடிக்கு மகளுடன் தப்பி வந்த தம்பதி, மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்பட்டனர்.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

இலங்கையில் இருந்து படகு மூலம் தனுஷ்கோடிக்கு மகளுடன் தப்பி வந்த தம்பதி, மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்பட்டனர்.

அகதிகளாக வந்தனர்

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு வாழ முடியாமல் ஏற்கனவே பலர் அகதிகளாக தமிழகம் வந்துள்ளனர். இந்த நிலையில் ராமேசுவரம் அருகே உள்ள தனுஷ்கோடி கோதண்டராமர் கோவில் கடற்கரையில், அகதியாக சிலர் வந்து இறங்கி இருப்பதாக மீனவர்கள் மூலம் கடலோர போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதை தொடர்ந்து ராமேசுவரம் கடலோர போலீசார் அங்கு விரைந்து சென்றனர். கடற்கரையில் இறங்கி நடந்து வந்து கொண்டிருந்த 2 பெண்கள் உள்ளிட்ட 3 பேரையும் வாகனத்தில் ஏற்றி மண்டபம் போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர்.

பெற்றோர்-மகள்

விசாரணையில், அவர்கள் இலங்கை யாழ்ப்பாணம் பகுதியில் இருந்து வந்த ஜால்ஸ் (வயது 46), இவருடைய மனைவி ராஜினி, இவர்களுடைய மகள் தபேந்தினி என்பது தெரியவந்தது. இதில் ஜால்ஸ் இலங்கையில் மீன்பிடி தொழில் செய்து வந்துள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு அவர் உள்பட 3 மீனவர்கள், பிளாஸ்டிக் படகு ஒன்றில் மீன் பிடிக்க சென்றபோது கடலில் சிறிய பொருள் ஒன்று மிதந்து வந்ததாகவும் அந்த பொருளை ஜால்ஸ் கையில் எடுத்து பார்த்தபோது திடீரென அந்த பொருள் வெடித்ததில் கை துண்டாகி, படுகாயம் அடைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மண்டபம் முகாமில் ஒப்படைப்பு

மேலும் தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அத்தியாவசிய பொருட்களின் விலை இன்னும் குறையாததால் வீடுகளில் இருந்த அனைத்து பொருட்களையும் விற்று அதில் கிடைத்த பணத்தை படகோட்டியிடம் கொடுத்து, கடல் வழியாக தனுஷ்கோடிக்கு தப்பி வந்ததாகவும் தெரிவித்துள்ளார். விசாரணைக்கு பின்னர் 3 பேரும் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்பட்டனர்


Related Tags :
Next Story