தோழியுடன் சேர்ந்து காதல் கணவரை மதுவில் விஷம் கலந்து கொன்ற பெண்...!


தோழியுடன் சேர்ந்து காதல் கணவரை மதுவில் விஷம் கலந்து கொன்ற பெண்...!
x

கணவனை தோழியுடன் சேர்ந்து மனைவி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர்

கடலூர்,

கடலூர் மாவட்டம் வடலூர் பார்வதிபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் மணி மகன் ராஜசேகர் (வயது 34), கட்டிட தொழிலாளி. இவரது மனைவி மஞ்சுளா. இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கோடை விடுமுறையையொட்டி மஞ்சுளா தனது குழந்தைகளுடன், கடலூர் அருகே பச்சையாங்குப்பத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றிருந்தார்.

இதையடுத்து கடந்த 27-ந்தேதி காலை ராஜசேகர், தனது மனைவி மற்றும் குழந்தைகளை பார்த்துவிட்டு வருவதாக தன்னுடைய தாய் பானுமதியிடம் கூறிச்சென்றார்.

ஆனால் அவர் 3 நாட்களாகியும், மஞ்சுளாவின் தாய் வீட்டுக்கு வரவில்லை என தெரிகிறது. இந்த நிலையில் கடந்த 30-ந்தேதி ராஜசேகர், குள்ளஞ்சாவடி அருகே டி.பாளையம் பொன்னையங்குப்பத்தில் உள்ள கரும்பு தோட்டத்தில் உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்த தகவல் அறிந்து வந்த குள்ளஞ்சாவடி போலீசார், ராஜசேகரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி பானுமதி, தனது மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதில் மஞ்சுளாவின் நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார்.

இதனால் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது மஞ்சுளா தனது தோழி மற்றும் அவரது கணவர் உதவியுடன் மதுவில் விஷம் கலந்து கொடுத்து ராஜசேகரை கொன்றது தெரியவந்தது.

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ராஜசேகரும், மஞ்சுளாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆரம்பத்தில் மகிழ்ச்சியுடன் வாழ்க்கையை தொடங்கிய மஞ்சுளா, அதன் பிறகு ராஜசேகர் குடித்துவிட்டு, பிற பெண்களுடன் தொடர்பில் இருந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதனால் காதல் திருமணம் சில ஆண்டுகளிலேயே கசந்தது. இதை தட்டிக்கேட்ட போது கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் கோடை விடுமுறையில் தாய் வீட்டுக்கு வந்த மஞ்சுளா, கடலூர் அடுத்த தொண்டமாநத்தத்தில் உள்ள தனது தோழி வினோதினி (30) வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அவரிடம், ராஜசேகர் தன்னை கொடுமைப்படுத்துவதாக கூறியுள்ளார். இதனால் மஞ்சுளா, வினோதினி, இவரது கணவர் சசிக்குமார் (39) ஆகியோர் வெளிநாட்டு மதுவில் விஷம் கலந்து கொடுத்து ராஜசேகரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியுள்ளனர். இதற்கு சசிக்குமார், தன்னுடன் சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்த கடலூர் திருப்பாதிரிப்புலியூரை சேர்ந்த தனது நண்பர் மோகனையும் (32) உதவிக்கு அழைத்துள்ளார். இவர்கள் இருவரும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்துள்ளனர்.

பின்னர் கடந்த 27-ந் தேதி மஞ்சுளா, ராஜசேகரை செல்போனில் தொடர்பு கொண்டு தனது தோழி வினோதினியின் வீட்டுக்கு வரவழைத்தார். அங்கு ராஜசேகர் வந்ததும், அவரை சசிக்குமார், மோகன் ஆகியோர் மது குடிக்க குள்ளஞ்சாவடி அருகே பொன்னையங்குப்பம் பகுதிக்கு அழைத்து சென்றுள்ளனர். பின்னர் ஏற்கனவே விஷம் கலந்து தயாராக வைத்திருந்த மதுவை, ராஜசேகரிடம் கொடுத்துள்ளனர். அதை குடித்த சிறிது நேரத்தில் அவர் மயங்கி விழுந்துள்ளார். இருப்பினும் அவர் சாகும் வரை இருவரும் அங்கேயே காத்திருந்தனர்.

பின்னர் ராஜசேகர் இறந்ததை உறுதி செய்ததும், சசிக்குமார், மோகன் ஆகியோர் அவரது உடலை அருகில் இருந்த கரும்பு தோட்டத்தில் வீசிச்சென்றது தெரியவந்தது.

இதையடுத்து சந்தேக மரணம் என்ற வழக்கை குள்ளஞ்சாவடி போலீசார் கொலை வழக்காக மாற்றி பதிவு செய்து மஞ்சுளா, சசிக்குமார், மோகன், வினோதினி ஆகியோரை கைது செய்தனர்.

கணவனை தோழியுடன் சேர்ந்து மனைவி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story