நகை பறிப்பில் ஈடுபட்ட பெண், கணவர்-மகனுடன் கைது

நகை பறிப்பில் ஈடுபட்ட பெண், கணவர்-மகனுடன் கைது
கோவை
தமிழகம் முழுவதும் நகை பறிப்பில் ஈடுபட்டபெண், கணவர்-மகனுடன் கைது செய்யப்பட்டார். கொள்ளையடித்த பணத்தில் கோவையில் சொந்தமாக வீடு வாங்கியது அம்பலமானது.
ஓடும் பஸ்சில் நகை பறிப்பு
கோவை மாநகரில் கடந்த சில மாதங்களாக ஓடும் பஸ்சில் பெண்களை குறி வைத்து தொடர் நகை பறிப்பு மற்றும் கோவில் திருவிழாக்களில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்களிடம் தங்க சங்கிலிகளை பறித்து செல்லும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. இந்த குற்றவாளிகளை குறி வைத்து பிடிக்க மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் துணை கமிஷனர் மாதவன் மேற்பார்வையில் உதவி கமிஷனர் மணிகண்டன் தலைமையில் சிறப்பு படை சப்-இன்ஸ்பெக்டர்கள் மாரிமுத்து, நாகராஜ் மற்றும் போலீஸ்காரர்கள் உமா, கார்த்தி, பூபதி, ரங்கராஜ் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதற்கிடையே சில தினங்களுக்கு முன்பு தொடர் நகை பறிப்பில் ஈடுபட்ட தெலுங்கு பாளையம் தாமு நகரை சேர்ந்த நாகம்மாள் (வயது 48) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-
காரில் தப்பி விடுவார்கள்
நாகம்மாளின் சொந்த ஊர் மதுரை. இவரது கணவர் ராமு, மகன் சத்யா. இவர்கள் 3 பேரும் காரில் ஊர் ஊராக சென்று நகை பறிப்பில் ஈடுபடுவது வழக்கம். நாகம்மாள் பஸ்சில் ஏறி பயணிகளுடன் பயணிகளாக அமர்ந்து பயணித்து, அருகில் இருக்கும் பெண்களின் கவனத்தை திசை திருப்பி நகையை பறித்து கொள்வார். நகையை பறித்தவுடன் அருகே எந்த பஸ் நிறுத்தம் வருகிறதோ அங்கே இறங்கி கொள்வார். அவர் செல்லும் பஸ்சை பின்தொடர்ந்து அவரின் கணவர் அல்லது மகன் காரில் செல்வார்கள். இதைத்தொடர்ந்து அவர், பஸ் நிறுத்தத்தில் வைத்து காரில் ஏறி தப்பிவிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இப்படி பலரிடம் நகையை பறித்துள்ளனர்.
கோவையில் சொந்த வீடு
இப்படி கொள்ளையடித்த பணத்தில் கோவை காந்திபுரம் பாரதியார் ரோட்டில் சொந்தமாக வீடு ஒன்றை வாங்கி அதனை தற்போது வாடகைக்கு விட்டதும் தெரியவந்தது. இவ்வாறு அவர்கள் கூறினர்.இதையடுத்து போலீசார் நாகம்மாள் கொடுத்த தகவலின் பேரில் ராமு, சத்யா ஆகியோரை கைது செய்தனர்.






