குடும்ப தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலை


குடும்ப தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலை
x

பண்ருட்டியில் குடும்ப தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அவரை காப்பாற்ற முயன்ற கணவரும் படுகாயமடைந்தார்.

கடலூர்

பண்ருட்டி,

கடலூர் மாவட்டம் பண்ருட்டி திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் விமல்ராஜ்(வயது 38). இவர் பண்ருட்டி மார்க்கெட்டில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி சரிதா(30).

கணவன், மனைவிக்கு இடையே கடந்த சில நாட்களாக குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று காலையிலும் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த சரிதா திடீரென வீட்டில் இருந்த மண்எண்ணெயை தன்மீது ஊற்றி தீ வைத்தார். அவரது உடல் முழுவதும் தீ பற்றி எரிந்தது. தீக்காயமடைந்த அவர் வலியால் அலறித்துடித்தார். இதைபார்த்த விமல்ராஜ், சரிதாவை காப்பாற்ற முயன்றார். அப்போது அவர் மீது தீப்பற்றிக்கொண்டது. இதில் 2 பேரும் உடல் கருகினர்.

பெண் சாவு

இவர்களது அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர், விரைந்து வந்து அவர்கள் மீது பற்றி எரிந்த தீயை அணைத்தனர். பின்னர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் அவர்கள் மேல்சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சரிதா பரிதாபமாக உயிரிழந்தார். விமல்ராஜூக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பண்ருட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story