வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை: கணவர்-மாமியாருக்கு 7 ஆண்டு சிறை


வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை: கணவர்-மாமியாருக்கு 7 ஆண்டு சிறை
x

வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த வழக்கில் அவரது கணவர்-மாமியாருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு கூறி உள்ளது.

மதுரை

மதுரை,

மதுரை சமயநல்லூர் ஊர்மெச்சிகுளத்தை சேர்ந்தவர் ராஜசேகர். இவர் தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருக்கும், மதுரை பழங்காநத்தத்தை சேர்ந்த பிரீத்தா என்பவருக்கும் கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 10 மாதத்தில் ஒரு குழந்தை உண்டு. இந்த நிலையில் ராஜசேகர், அவரது தாயார் சகுந்தலா மற்றும் குடும்பத்தினர், நகை மற்றும் பணம் வரதட்சணையாக கேட்டு பிரீத்தாவை கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். இதனால் மனமுடைந்த பிரீத்தா கடந்த 2011-ம் ஆண்டு ஜனவரி மாதம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சமயநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜசேகர், அவரது தாயார் சகுந்தலா ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை மதுரை மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கில் அரசுத்தரப்பில் வக்கீல் காவேரி சாந்தி ஆஜரானார். இதற்கிடையே, வழக்கின் விசாரணை முடிந்து நேற்று இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. அப்போது, ராஜசேகர் அவரது தாயார் சகுந்தலா ஆகியோர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் அவர்கள் இருவருக்கும் தலா 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி கிருபாகரன் மதுரம் உத்தரவிட்டார். அத்துடன், சிறை தண்டனையுடன் ராஜசேகருக்கு ரூ.2 லட்சமும், சகுந்தலாவுக்கு ரூ.50 ஆயிரமும் அபராதம் விதித்தும் நீதிபதி உத்தரவிட்டார்.


Related Tags :
Next Story