தூக்கில் பிணமாக தொங்கிய பெண்


தூக்கில் பிணமாக தொங்கிய பெண்
x

தூக்கில் பெண் பிணமாக தொங்கினார்.

பெரம்பலூர்

குன்னம்:

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள வயலப்பாடி கீரனூர் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல். கூலித்தொழிலாளி. இவரது மனைவி ஜெயராணி(வயது 24). இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது. கோகுல்ராஜ்(4) என்ற மகன் இருக்கிறான். சக்திவேலுக்கும், ஜெயராணிக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. அதன்படி நேற்று முன்தினம் தகராறு ஏற்பட்டதை தொடர்ந்து, ஜெயராணியின் தாய் செந்தாமரை, அவர்களை சமாதானம் செய்து வீட்டில் விட்டுவிட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று ஜெயராணி வீட்டில் உள்ள அறையின் மின்விசிறியில் தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்கியுள்ளார். இதுகுறித்து உறவினர்கள் செந்தாமரைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து குன்னம் போலீசில் செந்தாமரை கொடுத்த புகாரில், சக்திவேல் குடிபோதையில் தனது மகளை அடித்து துன்புறுத்தியதாகவும், தனது மகளின் சாவில் மர்மம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஜெயராணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து மங்களமேடு போலீஸ் துணை சூப்பிரண்டு சந்தியா, இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஜெயராணிக்கு திருமணமாகி 5 ஆண்டுகளே ஆவதால், இது குறித்து பெரம்பலூர் கோட்டாட்சியர் விசாரணைக்கு பரிந்துரை செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story