குடும்ப தகராறில் தூக்குப்போட்டு பெண் சாவு


குடும்ப தகராறில் தூக்குப்போட்டு பெண் சாவு
x

காட்டுமன்னார்கோவில் அருகே குடும்ப தகராறில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார். இதைபார்த்து மனமுடைந்த அவரது கணவர் தற்கொலைக்கு முயற்சியில் ஈடுபட்டார்.

கடலூர்

காட்டுமன்னார்கோவில்,

காட்டுமன்னார்கோவில் அருகே நத்தமலை கிராமத்தை சேர்ந்தவர் சக்கரபாணி (வயது 43). தொழிலாளி. இவரது மனைவி தனலட்சுமி (40). இவர்களுக்கு திருமணம் ஆகி 19 ஆண்டுகள் ஆகிறது. ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் இரவு அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் மனமுடைந்த தனலட்சமி தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைபார்த்து சக்கரபாணி அதிர்ச்சி அடைந்தார். இதில் மனமுடைந்த அவரும் தற்கொலை செய்ய முடிவு செய்தார். அதன்படி வீட்டில் இருந்த பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். இதைபார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனிடையே இது குறித்த தகவலின் பேரில் புத்தூர் போலீசார் விரைந்து சென்று தனலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story