பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட வழக்கு: விழுப்புரம் கோர்ட்டில் சிபிசிஐடி சப்-இன்ஸ்பெக்டர் சாட்சியம்


பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட வழக்கு: விழுப்புரம் கோர்ட்டில் சிபிசிஐடி சப்-இன்ஸ்பெக்டர் சாட்சியம்
x
தினத்தந்தி 1 Feb 2023 6:45 PM GMT (Updated: 1 Feb 2023 6:45 PM GMT)

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட வழக்கில் விழுப்புரம் கோர்ட்டில் சிபிசிஐடி சப்-இன்ஸ்பெக்டர் சாட்சியம் அளித்தாா்.

விழுப்புரம்

பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவருக்கு முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கின் புகார்தாரரான பெண் ஐ.பி.எஸ். அதிகாரியிடம் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. தரப்பு வக்கீல் குறுக்கு விசாரணையை நிறைவு செய்ததை தொடர்ந்து இவ்வழக்கில் அரசு தரப்பு சாட்சிகளிடம் தற்போது விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு ஆகிய இருவரும் ஆஜராகவில்லை. அவர்கள் ஆஜர் ஆகாததற்கான காரணம் குறித்து மனுதாக்கல் செய்யப்பட்டது. மேலும் இவ்வழக்கில் நேற்று அரசு தரப்பு சாட்சியான விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்தழகன் ஆஜராகி சாட்சியம் அளித்தார். அவரது சாட்சியம் முடிந்ததும் அவரிடம் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு ஆகிய இருவரின் தரப்பு வக்கீல்களும் குறுக்கு விசாரணை செய்தனர். இந்த சாட்சியம் மற்றும் குறுக்கு விசாரணை முழுவதையும் நீதிபதி புஷ்பராணி பதிவு செய்துகொண்டார். இதையடுத்து இவ்வழக்கு விசாரணை 3-ந் தேதி (நாளை) மீண்டும் நடைபெறும் என நீதிபதி புஷ்பராணி உத்தரவிட்டார்.


Next Story