கார் மோதி பெண் பலி


கார் மோதி பெண் பலி
x
தினத்தந்தி 4 Jan 2023 6:45 PM GMT (Updated: 4 Jan 2023 6:47 PM GMT)

ஓட்டப்பிடாரம் அருகே கணவர் கண் எதிரே கார் மோதிய விபத்தில், இருக்கன்குடி கோவிலுக்கு பாத யாத்திரை சென்ற பெண் பலியானார்

தூத்துக்குடி

ஓட்டப்பிடராம்:

ஓட்டப்பிடாரம் அருகே கணவர் கண் எதிரே கார் மோதிய விபத்தில், இருக்கன்குடி கோவிலுக்கு பாத யாத்திரை சென்ற பெண் பலியானார்.

பாத யாத்திரை சென்ற தம்பதி

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் தியாகராஜா நகரைச் சேர்ந்தவர் கணேசன். இவருடைய மகன் ரமேஷ் (வயது 32). கொத்தனார். இவருடைய மனைவி சந்தனமாரி (30). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

ரமேசும், சந்தனமாரியும் அப்பகுதியைச் சேர்ந்த சிலருடன் சேர்ந்து விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு பாத யாத்திரையாக புறப்பட்டு சென்றனர்.

கார் மோதியது

நேற்று அதிகாலையில் ஓட்டப்பிடாரம் அருகே எப்போதும்வென்றான் தேசிய நெடுஞ்சாலையில் பாத யாத்திரை பக்தர்கள் நடந்து சென்றனர். ரமேசும், சந்தனமாரியும் பக்தர்களின் கூட்டத்தில் கடைசியாக நடந்து சென்று கொண்டிருந்தனர்.

அப்போது எட்டயபுரத்தில் இருந்து தூத்துக்குடி நோக்கி சென்ற கார் திடீரென்று சந்தனமாரியின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மனைவியின் உடலைப் பார்த்து ரமேஷ் கதறி அழுதார்.

டிரைவருக்கு வலைவீச்சு

இதுகுறித்து தகவல் அறிந்ததும், எப்போதும் வென்றான் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜின்னா பீர் முகம்மது மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இறந்த முத்துமாரியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக எட்டயபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை பார்வையிட்டு, விபத்து ஏற்படுத்திய கார் டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர். பாத யாத்திரை சென்ற பெண் பக்தர், கணவர் கண் எதிரே கார் மோதி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story