மாரண்டஅள்ளி அருகே பணம் தர மறுத்த பெண்ணுக்கு அரிவாள் வெட்டு - கணவருக்கு போலீஸ் வலைவீச்சு


மாரண்டஅள்ளி அருகே பணம் தர மறுத்த பெண்ணுக்கு அரிவாள் வெட்டு - கணவருக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 21 Jun 2023 7:00 PM GMT (Updated: 22 Jun 2023 7:09 AM GMT)
தர்மபுரி

மாரண்டஅள்ளி:

மாரண்டஅள்ளி அமானி மல்லாபுரம் அருகே மந்திரி கவுண்டன் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் முனிராஜ் (வயது 60). கட்டிட மேஸ்திரி. இவருடைய மனைவி நாகம்மாள் (55). முனிராஜ் பெங்களூரு, ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் தங்கி கட்டிட வேலை செய்து வந்தார். இதன் காரணமாக வாரம் ஒரு முறை வீட்டிற்கு வந்து சென்றார். மேலும் இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருப்பதாக தெரிகிறது. நாகம்மாள் மகளிர் சுய உதவி குழு மூலம் கடன் பெற்றார். இதனை அறிந்த முனிராஜ் வேலையை முடித்துவிட்டு நேற்று முன்தினம் வீட்டிற்கு வந்தார்.

பின்னர் மனைவி நாகம்மாளிடம் சுயஉதவி குழு மூலம் கடன் பெற்ற பணத்தில் இருந்து செலவுக்காக கேட்டுள்ளார். ஆனால் நாகம்மாள் பணம் தர மறுத்ததால் அவர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த முனிராஜ் அரிவாளால் நாகம்மாளை வெட்டினார். இதில் அவருக்கு கழுத்து, கைகளில் வெட்டு விழுந்து வலியால் அலறினார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர், உறவினர் ஓடி வந்தனர். அதற்குள் முனிராஜ் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதையடுத்து நாகம்மாவை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்த புகாரின்பேரில் மாரண்டஅள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய முனிராஜை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story