குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியல்

குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அன்னவாசல் அருகே பரம்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட சீகம்பட்டிக்கு ஊராட்சி சார்பில் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இப்பகுதிக்கு கடந்த 10 நாட்களுக்கு மேலாக குடிநீர் வரவில்லை என கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள், பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாயினர். இதுகுறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் குடிநீர் வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெண்கள், பொதுமக்கள் சீகம்பட்டி சாலையில், காலிக்குடங்களுடன் குடிநீர் கேட்டு மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த அன்னவாசல் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்தன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பெண்கள், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.