காலிக்குடங்களுடன் பெண்கள் மறியல்
சீராக தண்ணீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பெண்கள் மறியலில் ஈடுபட்டனர்.
பழனி நகராட்சிக்கு உட்பட்ட சத்யாநகர் பகுதியில் ஏராளமான வீடுகள் உள்ளன. இங்கு வசிக்கிற மக்களுக்கு சீராக குடிநீர் வினியோகம் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதியை சேர்ந்த பெண்கள், காலிக்குடங்களுடன் பழனி-புதுதாராபுரம் சாலைக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த பழனி நகராட்சி ஆணையர் பாலமுருகன், தாசில்தார் பழனிச்சாமி, பழனி டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, தங்களது பகுதிக்கு முறையாக தண்ணீர் வினியோகம் செய்யப்படுவதில்லை, போதிய கழிப்பிட வசதி இல்லை. இதுபற்றி நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டினர்.
இதற்கு மோட்டார் பழுதால் தண்ணீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. மோட்டார் பழுது விரைவில் சரி செய்யப்படும். அதுவரை லாரி மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்படும் என்று நகராட்சி அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனையடுத்து மறியலை கைவிட்டு பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.