மகளிர் குழு பொருட்களை மாநில அளவிலான கண்காட்சியில் விற்பனை செய்யலாம்


மகளிர் குழு பொருட்களை மாநில அளவிலான கண்காட்சியில் விற்பனை செய்யலாம்
x

மகளிர் குழு பொருட்களை மாநில அளவிலான கண்காட்சியில் விற்பனை செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரியலூர்

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் உள்ள மகளிர் சுய உதவி குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை விற்பனை செய்ய ஏதுவாக பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஒவ்வொரு ஆண்டும் மாநில அளவில் 3 கண்காட்சிகளை சென்னை நுங்கம்பாக்கம் அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது நவராத்திரி மற்றும் தீபாவளி பண்டிகையையொட்டி அடுத்த மாதம் (அக்டோபர்) 7-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை மாநில அளவிலான கண்காட்சி நடைபெறவுள்ளது. இக்கண்காட்சியில் அரியலூர் மாவட்ட மகளிர் சுய உதவி குழுக்களால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களான கைவினை பொருட்கள், கைத்தறி பொருட்கள், உணவு பொருட்கள், பாரம்பரிய அரிசிகள், சிறுதானிய மற்றும் சிறுதானிய மதிப்பு கூட்டு பொருட்கள், பனை ஓலை பொருட்கள் போன்ற பொருட்களும், நவராத்திரி பண்டிகையையொட்டி கொலு பொம்மைகள், சிறிய வகை நினைவு பரிசுகள் காட்சி மற்றும் விற்பனைக்கு வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இக்கண்காட்சியில் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களால் தயார் செய்யப்படும் பல்சுவை உணவு பொருட்கள் தயாரிக்கும் குழுக்களும் அரங்குகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. எனவே அரியலூர் மாவட்டத்தில் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள மகளிர் சுய உதவி குழுக்கள் மாநில அளவிலான கண்காட்சியில் பங்கேற்க விரும்பினால் நாளைக்குள் (புதன்கிழமை) https://exhibition.mathibazaar.com/login என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story