டிராவல்ஸ் நிறுவனம் மீது பெண் புகார்


டிராவல்ஸ் நிறுவனம் மீது பெண் புகார்
x

இரட்டிப்பு தொகை தருவதாக கூறி ரூ.8 லட்சம் மோசடி செய்ததாக டிராவல்ஸ் நிறுவனம் மீது பெண் புகார் அளித்துள்ளார். முதலீடு செய்து ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம் என பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அழைப்பு விடுத்துள்ளது.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்;

இரட்டிப்பு தொகை தருவதாக கூறி ரூ.8 லட்சம் மோசடி செய்ததாக டிராவல்ஸ் நிறுவனம் மீது பெண் புகார் அளித்துள்ளார். முதலீடு செய்து ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம் என பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அழைப்பு விடுத்துள்ளது.

ரூ.8 லட்சம் மோசடி

தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகா ராஜகிரி ஏ.பி.எம் நகர் பகுதியை சேர்ந்தவர் முகமது பாரூக். இவருடைய மகள் பைரோஜ் நிசா. இவர் தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதில், பாபநாசம் ரெயில்வே ஸ்டேஷன் ரோடு பகுதியில் வசிக்கும் ஒருவர், ஹமாத் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருவதாகவும், அதில் முதலீடு செய்தால், நிறுவனத்தின் லாபத் தொகையில் அதிக பங்கு தருவதாகவும், மேலும், 2 வருடத்தில் முதலீட்டுத் தொகை இரட்டிப்பாக கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறினார். இதை நம்பி அவரிடம் நான் ரூ.8 லட்சம் பணத்தை அளித்தேன். பணத்தை பெற்றுக் கொண்ட அந்த நபர் பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றி விட்டதாகவும், தனது பணத்தை மீட்டு தர வேண்டும் என கூறப்பட்டிருந்தது. அதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

புகார் அளிக்கலாம்

இந்த வழக்கு தற்போது தஞ்சை பொருளாதார குற்றப்பிரிவிற்கு மாறுதல் செய்யப்பட்டு புலன் விசாரணையில் இருந்து வருகிறது. இந்த வழக்கில் டிராவல்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்து, பணம் கட்டி ஏமாந்து பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள், தங்களது முதலீட்டு தொகைகள் திருப்பித் தரப்படாமல் ஏமாற்றப்பட்டிருந்தால், அவர்கள் தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை ராஜப்பாநகர் முதல்தெருவில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் நேரில் வந்து உரிய ஆவணங்களுடன் ஆஜராகி புகார் அளிக்கலாம் என பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story