எதை பார்க்க வேண்டும் என்பதை மக்களே தீர்மானிக்கட்டும்: 'தி கேரளா ஸ்டோரி' படத்திற்கு குஷ்பு ஆதரவு


எதை பார்க்க வேண்டும் என்பதை மக்களே தீர்மானிக்கட்டும்: தி கேரளா ஸ்டோரி படத்திற்கு குஷ்பு ஆதரவு
x

தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்திற்கு ஆதரவு தெரிவித்து நடிகை குஷ்பு பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

சென்னை,

கேரளாவை சேர்ந்த 32 ஆயிரம் இந்து இளம் பெண்களை மூளைச் சலவை செய்து மதம் மாற்றி ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர்த்ததாக சித்தரித்து எடுக்கப்பட்ட படம் 'தி கேரளா ஸ்டோரி'.

இந்த படம் சென்னை உள்பட தமிழகத்தில் முக்கிய நகரங்களில் மே 5-ஆம் தேதி இப்படம் வெளியானது. இந்த படத்துக்கு சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால் அசம்பாவிதங்களை தவிர்க்க தியேட்டர்களில் பலத்த பாதுகாப்பும் போடப்பட்டது.

இதையடுத்து தமிழகத்தில் மால்களில் உள்ள திரையரங்குகளில் மட்டும் இப்படம் திரையிடப்பட்ட நிலையில் இன்று முதல் திரையிடப்படாது என அறிவிக்கப்பட்டது. சட்ட ஒழுங்கு பிரச்சினை ,படத்திற்கான வரவேற்பு இல்லாததால் திரையரங்க நிர்வாகங்கள் இந்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்திற்கு ஆதரவு தெரிவித்து நடிகை குஷ்பு பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தை தடை செய்ய வலியுறுத்துபவர்கள் எதை கண்டு அச்சம் கொள்கின்றனர் என்றே தெரியவில்லை. வெளிப்படையாக கூறப்பட்ட உண்மையா அல்லது இந்த உண்மையின் அங்கமாக பல ஆண்டுகளாக அமைதியாகவும், தெரியாமலும் இருந்ததா என்று புரியவில்லை. எதை பார்க்க வேண்டும் என்பதை மக்களே தீர்மானம் செய்து கொள்ளட்டும். நீங்கள் யாருக்காகவும் முடிவெடுக்க வேண்டாம். காட்சிகளை ரத்து செய்வதற்காக தமிழ்நாடு அரசு நொண்டி காரணங்களை கூறி வருகிறது. இது கட்டாயம் பார்க்கப்பட வேண்டும் என்பதை மக்களிடம் தெரியப்படுத்தியதற்கு நன்றி" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

1 More update

Next Story