தேனியில் பரபரப்பு: வீட்டின் முன்பு சத்தமாக பேசியதை கண்டித்த மரக்கடைக்காரர் அடித்துக் கொலை - 4 வாலிபர்கள் வெறிச்செயல்...!


தேனியில் பரபரப்பு: வீட்டின் முன்பு சத்தமாக பேசியதை கண்டித்த மரக்கடைக்காரர் அடித்துக் கொலை - 4 வாலிபர்கள் வெறிச்செயல்...!
x

தேனி அருகே வீட்டின் முன்பு சத்தம் போட்டதை கண்டித்த மரக்கடைக்காரரை அடித்துக் கொலை செய்த 4 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

தேனி,

தேனி அருகே கோடாங்கிபட்டி பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 61). இவர் மரக்கடை வைத்திருந்தார். நேற்று இரவு தனது வீட்டில் இருந்தார்.

அப்போது அவருடைய வீட்டுக்கு அருகே, காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கருணாநிதி மகன் சுகுமார் (19), அமராவதி பள்ளி தெருவை சேர்ந்த காளிதாஸ் மகன் கபில் (21), சந்திரகுமார் மகன் சேவாக் (19), மாணிக்கம் மகன் அஜித் (20) ஆகியோர் நின்று சத்தமாக பேசிக் கொண்டு இருந்தனர்.

அந்த வாலிபர்கள் ஆபாச வார்த்தைகளுடன் சத்தமாக பேசியதால், பாண்டியன் அவர்களை கண்டித்தார். இதனால் அவருடன் அந்த வாலிபர்கள் தகராறு செய்தனர்.

இதையடுத்து அந்த 4 பேரும் சேர்ந்து பாண்டியனை கீழே தள்ளிவிட்டு சரமாரியாக தாக்கினர். அப்போது அங்கு வந்த சேவாக்கின் தந்தை சந்திரகுமாரும் பாண்டியனை கம்பால் தாக்கியதாக கூறப்படுகிறது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அங்கு வந்ததால் அவர்கள் 4 பேரும் அங்கிருந்து சென்று விட்டனர். இந்நிலையில் இந்த தாக்குதலில் காயம் அடைந்த பாண்டியன் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

தகவல் அறிந்தத பழனிசெட்டிபட்டி போலீசார் சம்பவம் இடம் வந்து பாண்டியனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து அவருடைய மனைவி செல்வி கொடுத்த புகாரின் பேரில், பழனிசெட்டிபட்டி போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து சுகுமார், கபில், சேவாக், அஜித் ஆகிய 4 பேரையும் இன்று கைது செய்தனர். தலைமறைவாக உள்ள சந்திரகுமாரை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story