இசக்கியம்மன் சிலையை உடைத்த தொழிலாளி கைது


இசக்கியம்மன் சிலையை உடைத்த தொழிலாளி கைது
x
தினத்தந்தி 2 Oct 2023 6:45 PM GMT (Updated: 2 Oct 2023 6:46 PM GMT)

மார்த்தாண்டம் அருகே இசக்கியம்மன் சிலையை உடைத்த தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

கன்னியாகுமரி

குழித்துறை:

மார்த்தாண்டம் அருகே இசக்கியம்மன் சிலையை உடைத்த தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

மார்த்தாண்டம் அருகே உள்ள ஞாறான்விளை கைசாலவிளையில் இசக்கியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தினமும் காலை, மாலை வேளைகளில் பூஜை நடைபெறுவது வழக்கம். இந்த கோவிலின் முன்பு ஒரு காணிக்கை பெட்டியும், அதன் மீது இசக்கியம்மன் முழு உருவச்சிலையும் வைக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் நேற்று காலை அப்பகுதியை சேர்ந்தவர்கள் கோவிலுக்கு வந்தனர். அப்போது கோவிலின் முன்பு இருந்த இசக்கியம்மன் சிலை உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே இதுகுறித்து ஊர் தலைவர் ராஜகுமார் மற்றும் மார்த்தாண்டம் போலீசுக்கு தகவல் தொிவிக்கப்பட்டது.

அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் நேற்று முன்தினம் இரவு யாரோ மர்ம ஆசாமிகள் அந்த காணிக்கை பெட்டி மீது இருந்த இசக்கியம்மன் சிலையை தூக்கி வீசி உடைத்து சேதப்படுத்தியது தெரியவந்தது.

மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். இதில் மர்ம நபரின் உருவம் பதிவாகியிருந்தது. அதன் அடிப்படையில் பாகோடு பேரை காலனி பகுதியை சோ்ந்த கூலிதொழிலாளியான செல்லத்துரை (வயது 40) உள்பட 2 பேரை பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் செல்லத்துரை தான் மது போதையில் அம்மன் சிலையை உடைத்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மற்றொரு நபரை விடுவித்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Related Tags :
Next Story