மதுபாட்டிலால் தொழிலாளி அடித்துக்கொலை


மதுபாட்டிலால் தொழிலாளி அடித்துக்கொலை
x

ஜோலார்பேட்டை அருகே மதுபாட்டிலால் தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டார். சொத்து தகராறில் நடந்ததா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை அருகே மதுபாட்டிலால் தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டார். சொத்து தகராறில் நடந்ததா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரத்த வெள்ளத்தில் பிணம்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த குடியானகுப்பம், ராம கவுண்டர் வட்டம் பகுதியில் ஆண் ஒருவர் தலையில் காயத்துடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.

இதுகுறித்த தகவலின் பேரில் ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தியதில், இறந்து கிடந்தவர் அதே பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் (வயது 50) என்பதும், கூலி வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.

கோவிந்தராஜியின் மனைவி இறந்துவிட்டதாகவும், அவர்களுக்கு குழந்தைகள் இல்லை என்றும் கூறப்படுகிறது. மேலும் அவருடன் பிறந்த சகோதர, சகோதரிகள் 9 பேர் என்பதும், கோவிந்தராஜ் ராம கவுண்டர் வட்டம் பகுதியில் உள்ள அவரது சகோதரி வீட்டின் அருகில் செட் அமைத்து தனியாக வசித்து வந்ததாகவும் தெரிகிறது.

அடித்துக்கொலை

மேலும் கோவிந்தராஜிக்கும், அவரது குடும்பத்தாருக்கும் சொத்து சம்பந்தமாக பிரச்சினை இருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் கோவிந்தராஜ் வசிக்கும் குடியிருப்பு ஷெட்டில் இருந்து 300 மீட்டர் தொலைவில் மதுபாட்டிலால் கோவிந்தராஜின் மண்டை உடைக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்த நிலையில் முட்புதரின் அருகே பிணமாக இருந்ததும் தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் கோவிந்தராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சொத்து தகராறில்...

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, கோவிந்தராஜை சொத்து தகராறு காரணமாக மர்ம நபர்கள் அடித்துக்கொலை செய்தார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story