தொழிலாளி வெட்டிக்கொலை; மனைவி கைது


தொழிலாளி வெட்டிக்கொலை; மனைவி கைது
x

மயிலாடுதுறை அருேக மதுபோதையில் மகனை தாக்கிய தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது மனைவி கைது செய்யப்பட்டு உள்ளார்.

மயிலாடுதுறை

மணல்மேடு:

மயிலாடுதுறை அருேக மதுபோதையில் மகனை தாக்கிய தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது மனைவி கைது செய்யப்பட்டு உள்ளார்.

மதுபோதையில் தகராறு

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே உள்ள கொற்கை கிராமத்தைச் சேர்ந்தவர் மகாதேவன்(வயது53). தொழிலாளி. இவருடைய மனைவி அமுதா(37). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். மகாதேவன் அடிக்கடி மது அருந்திவிட்டு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

நேற்றுமுன்தினம் இரவு மனைவியிடம் பணம் வாங்கி மது அருந்திய மகாதேவன் மது பாட்டிலுடன் வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டாா். இதை அவரது மூத்த மகன் தட்டிக்கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த மகாதேவன் மதுபாட்டிலை உடைத்து தனது மகனை தாக்கியதாக கூறப்படுகிறது.

வெட்டிக்கொலை

இதனால் அதிர்ச்சி அடைந்த அமுதா தனது கணவரை தடுக்க முயன்றாா். அப்போது மகாதேவன் அருகே கிடந்த அரிவாளை எடுத்து தனது மனைவி அமுதாவை வெட்ட முயன்றாா். உடனே சுதாரித்துக்கொண்ட அமுதா தனது கணவர் கையில் இருந்த அரிவாளை பிடுங்கி அவரை கழுத்தில் வெட்டினார். இதில் படுகாயமடைந்த மகாதேவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் அமுதா மணல்மேடு போலீஸ் நிலையத்துக்கு சென்று கணவனை கொன்று விட்டதாக கூறி சரணடைந்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.

பிரேத பரிசோதனை

இதைத்தொடர்ந்து மணல்மேடு போலீசார் சம்பவஇடத்துக்கு சென்று மகாதேவனின் உடலை கைப்பற்றி மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். குடும்பத்தகராறில் கணவனை மனைவி வெட்டிக்கொன்ற சம்பவம் மணல்மேடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story