தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை


தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 4 Aug 2023 6:45 PM GMT (Updated: 4 Aug 2023 6:46 PM GMT)

திருவட்டார் அருகே காதல் மனைவி கோபித்து தாயார் வீட்டுக்கு சென்றதால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கன்னியாகுமரி

திருவட்டார்:

திருவட்டார் அருகே காதல் மனைவி கோபித்து தாயார் வீட்டுக்கு சென்றதால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

காதல் திருமணம்

திருவட்டார் அருகே உள்ள முளகுமூடு நீங்காரவிளை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது27),தொழிலாளி. இவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு சினேகா(25) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சினேகா அழகியமண்டபத்தில் உள்ள ஒரு நகைக்கடையில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

சுரேசுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், அவர் தினமும் வேலை முடிந்து வீட்டுக்கு வரும்போது மதுகுடித்து விட்டு மனைவியிடம் தகராறு செய்வது வழக்கம்.

மனைவி கோபித்து சென்றார்

கடந்த 1-ந்தேதி சுரேஷ் மது குடித்துவிட்டு வந்து மனைவி சினேகாவிடம் தகராறு செய்து தாக்கியுள்ளார். இதனால் சினேகா கணவரிடம் கோபித்துக் கொண்டு 3 பிள்ளைகளுடன் மத்திக்கோட்டில் உள்ள தனது தாயாா் வீட்டுக்கு சென்று விட்டார்.

ஏற்கனவே சுரேசின் தாயார் உடல்நலக்குறைவால் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தற்போது மனைவியும் தன்னிடம் கோபித்து தாயார் விட்டுக்கு சென்றதால், வீட்டில் தனியாக வசித்து வந்த சுரேஷ் மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்தார்.

தற்கொலை

இந்தநிலையில் சம்பவத்தன்று இரவு வீட்டில் தனியாக இருந்த சுரேஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று முன்தினம் சுரேசின் வீட்டு கதவு திறக்காததால் அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்தனர்.

அப்போது, சுரேஷ் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே சினேகாவுக்கு இதுபற்றி தெரிவித்தனர். சினேகா வந்து பார்த்து விட்டு இதுகுறித்து திருவட்டார் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சுரேசின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

சோகம்

மேலும், இதுகுறித்து திருவட்டார் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கருணாகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

காதல் மனைவி கோபித்து தாயார் வீட்டுக்கு சென்றதால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story