கிணற்றில் மூழ்கி தொழிலாளி பலி


கிணற்றில் மூழ்கி தொழிலாளி பலி
x
தினத்தந்தி 23 May 2023 7:00 PM GMT (Updated: 23 May 2023 7:00 PM GMT)

வடமதுரை அருகே கிணற்றில் குளிக்க சென்ற போது நீரில் மூழ்கி தொழிலாளி பலியானார்.

திண்டுக்கல்

நீரில் மூழ்கிய தொழிலாளி

வடமதுரை அருகே உள்ள பிலாத்து கம்பிளியம்பட்டியை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 36). கூலித்தொழிலாளி. நேற்று வேல்முருகன் தனது உறவினரான சந்தானம் என்பவருடன் அதே பகுதியில் உள்ள ஒரு விவசாய கிணற்றுக்கு குளிப்பதற்காக சென்றார். இருவரும் கிணற்றில் குளித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென்று வேல்முருகன் தண்ணீரில் மூழ்கினார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த சந்தானம் அக்கம்பக்கத்தினரை காப்பாற்ற வரும்படி அழைத்தார். உடனே அவர்கள் ஓடி வந்து கிணற்றில் குதித்து வேல்முருகனை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர்களால் காப்பாற்ற முடியவில்ைல.

உடல் மீட்பு

இதுகுறித்து வேடசந்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நிலைய அலுவலர் ஜேம்ஸ் அருள் பிரகாஷ் தலைமையிலான படைவீரர்கள் கிணற்றில் இறங்கி வேல்முருகனின் உடலை தேடினர். சுமார் 45 அடி ஆழமுள்ள கிணற்றில் 35 அடி ஆழத்துக்கு தண்ணீர் இருந்தது. இதனால் வேல்முருகனின் உடலை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து மோட்டார் மூலம் கிணற்றில் இருந்த தண்ணீரை வெளியேற்றினர்.

பின்னர் சுமார் 2 மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் வேல்முருகனின் உடலை மீட்டனர். பின்னர் அவருடைய உடலை வடமதுரை போலீசார் ைகப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இறந்த வேல்முருகனுக்கு சரஸ்வதி (27) என்ற மனைவியும், புகழேந்தி (10), பிரசாந்த் (7) என்ற 2 மகன்களும் உள்ளனர். குளிக்க சென்ற கூலித்தொழிலாளி கிணற்றில் மூழ்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story