தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை; உறவினர்கள் மறியல்


தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை; உறவினர்கள் மறியல்
x

சிறைக்கு சென்று வந்த அவமானம் தாங்காமல் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

புதுக்கோட்டை

சிறையில் அடைப்பு

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே மூக்குடி கிராமத்தை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 50). கூலித்தொழிலாளி. அறந்தாங்கி அரசு மருத்துவமனை- பொற்குடையார்கோவில் சாலையில் பெட்டிக்கடை நடத்தி வருபவர் ரவிக்குமார் (35). இவர்கள் இருவருக்கும் இடையே சம்பவத்தன்று வாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அறந்தாங்கி போலீசார் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் பழனிசாமி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

தொழிலாளி தற்கொலை

இந்நிலையில், சிறையில் இருந்து ஜாமீனில் பழனிசாமி வெளியே வந்தார். மேலும் சிறைக்கு சென்று வந்த அவமானம் தாங்காமல் மனவேதனையுடன் பழனிசாமி இருந்து வந்தார். இதையடுத்து இன்று அவர் அவமானம் தாங்காமல் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த அறந்தாங்கி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பழனிசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது அங்கு வந்த பழனிசாமி உறவினர்கள், பழனிசாமி சாவிற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மருத்துவமனை வளாகம் முன்பு அறந்தாங்கி-பட்டுக்கோட்டை சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

இதுகுறித்து தகவல் அறிந்த அறந்தாங்கி தாசில்தார் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பழனிசாமி சாவிற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதன் பின்னர் அவர்கள் சாலை மறியலால் கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியால் அறந்தாங்கி-பட்டுக்கோட்டை சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story