சேத்தியாத்தோப்பு அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி


சேத்தியாத்தோப்பு அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
x
தினத்தந்தி 27 Feb 2023 6:45 PM GMT (Updated: 27 Feb 2023 6:46 PM GMT)

சேத்தியாத்தோப்பு அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிாிழந்தாா்.

கடலூர்

சேத்தியாத்தோப்பு,

சேத்தியாத்தோப்பு அருகே கொண்டசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் ஜனார்த்தனன் (வயது 50). இவர் தனக்கு சொந்தமான நிலத்தில் மணிலா பயிரிட்டுள்ளார். இந்த பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவது உள்ளிட்ட விவசாய வேலைகளை ஸ்ரீமுஷ்ணம் அடுத்த விராகுடி கிராமத்தை சேர்ந்த தொழிலாளி சுப்பிரமணியன் (63) என்பவர் செய்து வந்தார். இந்நிலையில் மணிலா வயலுக்குள் காட்டுப்பன்றிகள் அடிக்கடி வந்து, பயிர்களை அழித்து வந்ததாக தெரிகிறது. இதை கட்டுப்படுத்த ஜனார்த்தனன் மணிலா வயலை சுற்றிலும் மின்வேலி அமைத்திருந்தார். இதை அறியாத சுப்பிரமணியன் மின்வேலியில் மிதித்ததாக தெரிகிறது. இதில் மின்சாரம் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் சோழத்தரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் இறந்த சுப்பிரமணியன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காட்டுமன்னார்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story