கடனை திருப்பி கேட்டதால் ஆத்திரம் கத்தியால் குத்தி தொழிலாளி கொலை


கடனை திருப்பி கேட்டதால் ஆத்திரம் கத்தியால் குத்தி தொழிலாளி கொலை
x

கடனை திருப்பி கேட்ட தொழிலாளியை கத்தியால் குத்தி கொலை செய்த வாலிபர் கைதானார்.

சென்னை

திருவொற்றியூர்,

திருவொற்றியூர், ராஜாஜி நகரை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 60). தொழிலாளி. இவரது நண்பர் எர்ணாவூர் பஜனை கோவில் தெருவை சேர்ந்த ராஜா (35). வெல்டிங் வேலை செய்து வருகிறார்.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வெங்கடேசனிடம், ராஜா ரூ.5 ஆயிரம் கடன் வாங்கினார். அதில் ஆயிரம் ரூபாய் கொடுத்துவிட்டு மீதியுள்ள ரூ.4 ஆயிரத்தை திருப்பிக் கொடுக்கவில்லை என்று தெரிகிறது. மீதமுள்ள பணத்தை வெங்கடேசன் பலமுறை கேட்டும் ராஜா திருப்பி தரவில்லை.

இந்த நிலையில் நேற்று மதியம் சத்தியமூர்த்தி நகர், கங்கை அம்மன் தெரு அருகே ராஜா நின்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வெங்கடேசன் ராஜாவிடம் வாங்கிய பணத்தை திருப்பி கேட்டுள்ளார்.

இதனால் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த ராஜா தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வெங்கடேசன் வயிற்றில் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த வெங்கடேசனை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்சில் ஏற்றி சிகிச்சைக்காக சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் போகும் வழியிலேயே வெங்கடேசன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து சாத்தாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து வெங்கடேசன் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து தப்பி ஓடிய ராஜாவை போலீசார் கைது செய்து திருவொற்றியூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.


Next Story