ஊராட்சி மன்ற அலுவலகத்தை தொழிலாளர்கள் முற்றுகை


ஊராட்சி மன்ற அலுவலகத்தை தொழிலாளர்கள் முற்றுகை
x

திருக்கோவிலூர் அருகே ஊராட்சி மன்ற அலுவலகத்தை தொழிலாளர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் அருகே கண்டாச்சிபுரம் அடுத்த வீரபாண்டி கிராமத்தை சேர்ந்த 100 நாள் திட்ட தொழிலாளர்களுக்கு கூலி தொகை அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படவில்லை. இதை கண்டித்தும், இதில் அலட்சியம் காட்டும் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் வங்கி கணக்கில் பணம் எடுக்கும் போது ஆயிரம் ரூபாய்க்கு ரூ.20 கமிஷன் கேட்கும் வங்கி ஊழியரை கண்டித்தும் வீரபாண்டி கிராமத்தில் 100 நாள் திட்ட தொழிலாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கண்டாச்சிபுரம் தாசில்தார் கற்பகம், முகையூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சண்முகம் மற்றும் நாராயணன், மாவட்ட முன்னோடிவங்கி மேலாளர் ஹரிஹரசுதன் மற்றும் அரகண்டநல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் தங்களது பகுதியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி அமைக்க வேண்டும், வங்கி கணக்கில் ஆதார் அட்டை இணைக்க சிறப்பு முகாம் நடத்த வேண்டும், வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கும்போது கமிஷன் கேட்டும் வங்கி ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர். அதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். அதனை ஏற்று தொழிலாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story