கோவையில் 2,094 சிலைகள் வைத்து வழிபாடு


கோவையில் 2,094 சிலைகள் வைத்து வழிபாடு
x

இன்று (புதன்கிழமை) விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி கோவையில் 2,094 சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்படுகிறது.

கோயம்புத்தூர்

இன்று (புதன்கிழமை) விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி கோவையில் 2,094 சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்படுகிறது.

விநாயகர் சதுர்த்தி விழா

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது. கொரோனா காரணமாக 2 ஆண்டுகளாக பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடைபெற வில்லை.

கொரோனா பாதிப்பு குறைந்ததால் இந்த ஆண்டு எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படு கிறது. இது தொடர்பாக இந்து அமைப்பினர் மற்றும் ஜமாத் நிர்வாகிகளுடன் போலீசார் ஆலோசனை நடத்தினர்.

2,094 சிலைகள்

இதையடுத்து இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியையொட்டி கோவை புறநகரில் 1,564 சிலைகள், மாநகரில் 530 சிலைகள் என மொத்தம் 2 ஆயிரத்து 94 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்த அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

அதன்பிறகு விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கும் நிகழ்வு வருகிற 2 மற்றும் 4-ந் தேதிகளில் நடக்கிறது. இதையொட்டி கோவை மாநகரில் 1,500 போலீசார், புறநகரில் 2 ஆயிரம் போலீசார் என மொத்தம் 3,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

இது குறித்து கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

கடும் நடவடிக்கை

கோவை மாநகரில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். மாநகரில் உள்ள 11 சோதனைச்சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப் பட்டு உள்ளது. விநாயகர் சிலை பிரதிஷ்டை, ஊர்வலம் என அனைத்து நடவடிக்கைகளும் கண்காணிப்பு கேமரா மற்றும் டிரோன் கேமரா மூலம் கண்காணிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் ஊர்வலம் அமைதியாக நடைபெற அனைத்து நடவடிக்கைகளும் தயார் நிலையில் உள்ளன. மத நல்லிணக்கத்திற்கு எதிராக செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story