இன்று, போலீஸ் வேலைக்கான எழுத்து தேர்வு


இன்று, போலீஸ் வேலைக்கான எழுத்து தேர்வு
x

நெல்லை மாவட்டத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் போலீஸ் வேலைக்கான எழுத்து தேர்வை 6 மையங்களில் 14 ஆயிரத்து 442 பேர் எழுதுகின்றனர்

திருநெல்வேலி

நெல்லை மாவட்டத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் போலீஸ் வேலைக்கான எழுத்து தேர்வை 6 மையங்களில் 14 ஆயிரத்து 442 பேர் எழுதுகின்றனர்.

எழுத்து தேர்வு

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமத்தால் 2022-ம் ஆண்டு நடத்தப்பட உள்ள இரண்டாம் நிலை காவலர் (ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல்படை), 2-ம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது.

நெல்லையில் மாநகர பகுதி உள்பட மாவட்டம் முழுவதும் 6 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது. இதில் ஆண் விண்ணப்பதாரர்கள் 11,521 பேரும், பெண் விண்ணப்பதாரர்கள் 2,920 பேரும், திருநங்கை ஒருவர் என மொத்தம் 14,442 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

நெல்லை மாவட்ட காவல்துறை எழுத்து தேர்வு சிறப்பு மேற்பார்வை கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் தலைமையில், போலீஸ் சூப்பிரண்டு சரவணன் முன்னிலையில் ஆலோசனை கூட்டம், பாளையங்கோட்டை ஜான்ஸ் கல்லூரியில் நேற்று நடந்தது. தேர்வு மையங்களில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுவது குறித்து போலீசாருக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

அடிப்படை வசதிகள்

தேர்வு எழுத வருபவர்களை சோதனை செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள், தேர்வு மையங்களில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் உள்ளிட்டவை குறித்து தேர்வறையில் பணியாற்ற உள்ள போலீசாருக்கு மாநகர தலைமையிடத்து போலீஸ் துணை கமிஷனர் அனிதா அறிவுரை வழங்கினார்.

தேர்வையொட்டி மாநகர பகுதியில் உள்ள தேர்வு மையங்கள் நேற்று சுத்தப்படுத்தி தயார்படுத்தப்பட்டது. அங்கு குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

கடும் கட்டுப்பாடுகள்

இன்று நடைபெறும் தேர்வுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட சீட்டில் பிறந்த தேதி அல்லது வகுப்புவாரி பிரிவில் ஏதேனும் மாற்றம் இருந்தால், தொடர்புடைய அசல் சான்றிதழ்கள் மற்றும் அதன் புகைப்பட நகல்களை அரசு பதிவு பெற்ற ஒரு அலுவலரிடம் சான்றொப்பம் பெற்று, எழுத்து தேர்வின்போது தேர்வுக்கூட கண்காணிப்பாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

தேர்வுக்கூட சீட்டில் குறிப்பிட்டுள்ள தேர்வு மையத்தில் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். தேர்வுக்கூட சீட்டுடன் கூடுதலாக விண்ணப்பதாரர் புகைப்படத்துடன் கூடிய அரசால் வழங்கப்பட்ட அடையாள அட்டை கொண்டு வரவேண்டும். தேர்வு தொடங்கிய பின்னர் விண்ணப்பதாரர் யாரும் தேர்வுக்கூடத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

விடைத்தாளில் பட்டை தீட்டவோ, எழுதவோ நீலம் அல்லது கருப்பு நிற பால்பாய்ண்ட் பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும். செல்போன், கால்குலேட்டர், ஸ்மார்ட் வாட்ச், புளூடூத் போன்ற எலக்ட்ரானிக் கருவிகள் தேர்வு எழுதும் அறைக்குள் அனுமதிக்கப்பட மாட்டாது. மீறினால் அவரது தேர்வுநிலை ரத்து செய்யப்படும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாதுகாப்பு

தேர்வு மையங்களில் 2 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் மேற்பார்வையில், 8 உதவி மற்றும் துணை சூப்பிரண்டுகள், 17 இன்ஸ்பெக்டர்கள், 82 சப்-இன்ஸ்பெக்டர்கள் உட்பட 508 காவல் துறையினரும், அமைச்சு பணியாளர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.


Next Story