தொழிலாளர் நலவாரியத்தில் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்


தொழிலாளர் நலவாரியத்தில் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 4 Oct 2023 7:00 PM GMT (Updated: 4 Oct 2023 7:00 PM GMT)

தொழிலாளர் நலவாரியத்தில் கல்வி உதவித்தொகை பெற தொழிலாளர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தூத்துக்குடி தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) க.திருவள்ளுவன் தெரிவித்து உள்ளார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) க.திருவள்ளுவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

1972-ம் ஆண்டு தமிழ்நாடு தொழிலாளர் நலநிதி சட்டத்தின்படி தொழிற்சாலைகள், கடைகள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் தோட்ட நிறுவனங்கள் போன்ற அமைப்பு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தொழிலாளர் மற்றும் நிறுவனத்தின் பங்காக ஒவ்வொரு தொழிலாளிக்கும் ரூ.60 என்று கணக்கிட்டு நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தொழிலாளர் நல நிதித்தொகையை வாரியத்துக்கு செலுத்த வேண்டும். அதன்படி நடப்பு 2023-ம் ஆண்டுக்கான தொழிலாளர் நலநிதியை 21.1.24-க்குள் செலுத்த வேண்டும்.

உதவித் தொகை

தொழிலாளர் நலநிதி செலுத்தும் தொழிலாளர்கள் மற்றும் அவரை சார்ந்தவர்களுக்கு வாரியத்தின் மூலம் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் பிரி-கேஜி முதல் பட்ட மேற்படிப்பு வரை படிக்கும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு ரூ.1000 முதல் ரூ.12 ஆயிரம் வரை கல்வி உதவித்தொகை, பாடநூல் வாங்க உதவித் தொகை, 10, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கல்வி ஊக்கத் தொகை ஆகிய திட்டங்களுக்கு தொழிலாளர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்த உதவித்தொகையை பெற தொழிலாளர்களின் மாத ஊதியம் ரூ.25 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். விண்ணப்பங்களை தமிழ்நாடு தொழிலாளர் நலவாரிய அலுவலகத்தில் நேரிலோ அல்லது www.lwb.tn.gov.inஎன்ற இணையதளத்திலோ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை, செயலாளர், தமிழ்நாடு தொழிலாளர் நலவாரியம், டி.எம்.எஸ். வளாகம், தேனாம்பேட்டை, சென்னை-6 என்ற முகவரிக்கு 31.12.2023-க்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story