மானிய விலையில் நாட்டுக்கோழி பண்ணை அமைக்க விண்ணப்பிக்கலாம்


மானிய விலையில் நாட்டுக்கோழி பண்ணை அமைக்க விண்ணப்பிக்கலாம்
x

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மானிய விலையில் நாட்டுக்கோழி பண்ணை அமைக்க விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2023-24-ம் ஆண்டிற்கான சிறிய அளவிலான நாட்டுக்கோழி பண்ணைகள் அமைக்க ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டத்திற்கு பயனாளிகளாக தேர்ந்தேடுக்கப்படுபவர்களுக்கு கோழி கொட்டகை கட்டுமான செலவு, உபகரணங்கள் வாங்கும் செலவு மற்றும் 4 மாதங்களுக்கு தேவையான தீவன செலவு ஆகியவற்றிக்கான மொத்த செலவில் 50 சதவீத மானியமாக ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்து 625 மாநில அரசால் வழங்கப்படும். மீதமுள்ள 50 சதவீத பங்களிப்பு வங்கி மூலமாகவோ அல்லது தனது சொந்த ஆதாரங்கள் மூலமாகவோ பயனாளிகள் திரட்டப்பட வேண்டும்.

பயனாளிகள் அந்த கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும். விதவைகள், ஆதரவற்றோர், திருநங்கைகள், மாற்று திறனாளிகள் மற்றும் தாழ்த்தப்பட்ட/ பழங்குடியனிவருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

விருப்பமுள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தங்களது ஆதார் அட்டை நகல், பண்ணை அமையவிருக்கும் சிட்டா/ அடங்கல் நகல், 50 சதவீத தொகை அளிப்பதற்கான ஆதார் ஆவணங்கள் (வங்கி இருப்பு விவரம்/ வங்கி கடன் ஒப்புதல் விவரம்) 3 வருடத்திற்கு பண்ணையை பராமரிப்பதற்கான உறுதிமொழி, 2022-23-ம் ஆண்டிற்கான நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டத்தின் கீழ் பயனடையவில்லை என்பதற்கான சான்றுடன் அருகில் உள்ள கால்நடை மருந்தகங்களில் வருகிற 26-ந் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த தகவலை கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.


Next Story