விவசாயம், மண்பாண்ட தொழிலுக்கு மண் எடுக்க விண்ணப்பிக்கலாம்


விவசாயம், மண்பாண்ட தொழிலுக்கு மண் எடுக்க விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 15 March 2023 6:45 PM GMT (Updated: 15 March 2023 6:46 PM GMT)

நாகை மாவட்டத்தில் விவசாயம், மண்பாண்ட தொழிலுக்கு மண் எடுத்துக்கொள்ள விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளார்.

நாகப்பட்டினம்

நாகை மாவட்டத்தில் விவசாயம், மண்பாண்ட தொழிலுக்கு மண் எடுத்துக்கொள்ள விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மண் எடுக்க விண்ணப்பிக்கலாம்

நாகை மாவட்டத்தில் பொதுப்பணித்துறை, ஊரகவளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறையின் கட்டுபாட்டில் உள்ள நீர்நிலைகளில் மண், வண்டல் மண் மற்றும் களிமண் போன்ற சிறு கனிமங்களை தூர்வாரி கட்டணமில்லாமல் பொதுமக்களின் விவசாயம் மற்றும் மண்பாண்டதொழிலுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம். இவ்வாறு மண் எடுக்க விண்ணப்பதாரர்கள் உரிய ஆவணங்களுடன் தொடர்புடைய வேளாண்மை அலுவலர்களின் சான்று, மண்பாண்டத் தொழிலாளர்கள் சங்கம் சான்றுடன், கிராம நிர்வாக அலுவலர்களிடம் விண்ணப்பம் பெற்று விண்ணப்பிக்க வேண்டும்.

உரிய நிபந்தனைகளுடன் அனுமதி

விவசாய பயன்பாட்டிற்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை 1 ஏக்கர் பரப்பளவுள்ள நஞ்சை நிலத்திற்கு 75 கனமீட்டர் மற்றும் 1 ஏக்கர் பரப்பளவுள்ள புஞ்சை நிலத்திற்கு 90 கனமீட்டர் வண்டல் மண் எடுத்துக்கொள்ளலாம்.

அதேபோல மண்பாண்ட தொழிலாளர்கள், மண்பாண்டங்கள் செய்வதற்கு 60 கன மீட்டர் மிகாமல் களிமண் எடுத்துக்கொள்ளலாம். இவை இலவசமாக எடுத்துக் கொள்ள உரிய நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்படும். இதுதொடர்பாக மேலும் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட தாசில்தார் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story