சின்னசேலம் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு சாவு; தற்கொலைக்கு தூண்டியதாக காதல் கணவர் கைது


சின்னசேலம் அருகே     இளம்பெண் தூக்குப்போட்டு சாவு; தற்கொலைக்கு தூண்டியதாக காதல் கணவர் கைது
x
தினத்தந்தி 24 Oct 2023 6:45 PM GMT (Updated: 24 Oct 2023 6:46 PM GMT)

சின்னசேலம் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக காதல் கணவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

கள்ளக்குறிச்சி

சின்னசேலம்,

காதல் திருமணம்

சின்னசேலம் அருகே மாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் மாயக்கண்ணன்(வயது 45). கூலி தொழிலாளியான இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவியும், யமுனா(20), ரேவதி(18) ஆகிய 2 மகள்களும் உள்ளனர். மாயக்கண்ணன் குடும்பத்துடன் டெல்லியில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார். அப்போது அதேபகுதியில் தங்கி பணிபுரிந்த சின்னசேலம் அடுத்த பெரிய சிறுவத்தூரை சேர்ந்த வைரவேல் என்பவருக்கும் மாயக்கண்ணன் மகள் யமுனாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு, ஒருவரையொருவர் காதலித்து வந்தனர். இதையடுத்து அவர்கள் இருவரும் பெற்றோர்கள் சம்மதத்துடன் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு டெல்லியில் திருமணம் செய்து கொண்டனர்.

தற்கொலை

அதன்பிறகு வைரவேல் தனது காதல் மனைவியுடன் திருமணமான ஒரே வாரத்தில் சொந்த ஊரான பெரிய சிறுவத்தூருக்கு வந்து குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்த நிலையில் வைரவேல் அடிக்கடி மது குடித்து விட்டு யமுனாவிடம் தகராறு செய்ததுடன், உனது பெற்றோரிடம் பணம் வாங்கி வா என கேட்டு, துன்புறுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதுபற்றி யமுனா தனது தந்தையை செல்போனில் தொடர்பு கொண்டு கூறியதாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் யமுனா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக வைரவேல் தனது மாமனாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

உடலை வாங்க மறுத்து போராட்டம்

இதைகேட்டு அதிர்ச்சியடைந்த அவர் சொந்த ஊரில் உள்ள உறவினர்களிடம் இதுபற்றி தகவல் தெரிவித்தார். இதனிடையே மேற்கண்ட சம்பவம் குறித்து தகவல் அறிந்த சின்னசேலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து யமுனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே யமுனா தற்கொலை பற்றி தகவல் அறிந்த மாயக்கண்ணனின் உறவினர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்ட யமுனாவின் உடலை போலீசார் உறவினர்களிடம் ஒப்படைக்க முயன்றனர். ஆனால் உறவினர்கள் யமுனாவின் சாவுக்கு காரணமான வைரவேலை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கைது

இதுபற்றி தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ், துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் ஆகியோர் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, வைரவேலை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர். இதனை ஏற்ற உறவினர்கள் யமுனாவின் உடலை வாங்கி சொந்த ஊருக்கு எடுத்து சென்றனர். மேலும் இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து யமுனாவை வரதட்சணை கேட்டு துன்புறுத்தி, அவரை தற்கொலைக்கு தூண்டியதாக வைரவேலை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தற்கொலை செய்த யமுனாவுக்கு திருமணமாகி 1½ ஆண்டுகளே ஆவதால் கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story