போட்டி போட்டு கழுமரம் ஏறிய இளைஞர்கள்


போட்டி போட்டு கழுமரம் ஏறிய இளைஞர்கள்
x
தினத்தந்தி 2 Aug 2023 7:45 PM GMT (Updated: 2 Aug 2023 7:46 PM GMT)

சாணார்பட்டி அருகே ேகாவில் திருவிழாவில் இளைஞர்கள் போட்டிபோட்டு கழுமரம் ஏறினர்.

திண்டுக்கல்

சாணார்பட்டி அருகே ஆவிளிபட்டியில் முத்தாலம்மன், மாரியம்மன், பகவதியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா கடந்த மாதம் 18-ந் தேதி சாமி சாட்டுதலுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து தினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் ஆபரண பெட்டி ஊர்வலம், மாவிளக்கு, அக்னிசட்டி எடுத்தல், பொங்கல் வைத்தல், முளைப்பாரி எடுத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கழுமரம் ஏறும் நிகழ்ச்சி நேற்று மாலை கோவில் மந்தையில் நடைபெற்றது. இதற்காக சுமார் 35 அடி உயர மரம் கொண்டு வரப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர் அந்த மரத்தின் மீது சோற்று கற்றாழை, எண்ணெய், கேப்பை ஆகியவை தடவப்பட்டு தயார் நிலையில் ஊன்றப்பட்டது.

இதையடுத்து காப்பு கட்டி விரதம் இருந்த இளைஞர்கள் போட்டி போட்டு கழுமரத்தில் ஏறினர். அப்போது திரண்டு நின்ற பக்தர்கள் கைகளை தட்டி இளைஞர்களை உற்சாகப்படுத்தினர். சுமார் 1 மணி நேர முயற்சிக்கு பிறகு இளைஞர்கள் மரத்தின் உச்சியை அடைந்து அங்கு கட்டப்பட்டிருந்த தேங்காய், எலுமிச்சை பழம், பூ, மஞ்சள் அடங்கிய பிரசாதத்தை கைப்பற்றினர். இன்று (வியாழக்கிழமை) அம்மன் பூஞ்சோலையை சென்றடைதலுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.


Related Tags :
Next Story