கோட்டப்பட்டி அருகேஆற்றில் இறந்து கிடந்த பட்டதாரி வாலிபர்போலீசார் விசாரணை


கோட்டப்பட்டி அருகேஆற்றில் இறந்து கிடந்த பட்டதாரி வாலிபர்போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 4 Aug 2023 7:00 PM GMT (Updated: 4 Aug 2023 7:00 PM GMT)
தர்மபுரி

அரூர்:

கோட்டப்பட்டி அருகே தென்பெண்ணை ஆற்றில் பட்டதாரி வாலிபர் இறந்து கிடந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பட்டதாரி வாலிபர்

கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை அருகே உள்ள நார்ச்சம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சஞ்சய் (வயது 20). பி.காம். பட்டதாரி. இவர் தனது குடும்பத்தினருடன் நேற்று முன்தினம் டி.அம்மாபேட்டை தென்பெண்ணையாற்றில் ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாட சென்றார்.

அங்கு ஆற்றங்கரையில் பொங்கல் வைத்து கோவிலில் வழிபாடு செய்துவிட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பி விட்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சஞ்சய் வீட்டில் இருப்பவர்களுக்கு தெரியாமல் தென்பெண்ணை ஆற்றுக்கு குளிக்க சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலை சஞ்சய் வீட்டில் இல்லாததால் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

இறந்து கிடந்தார்

டி.அம்மாபேட்டை பகுதியில் உள்ள தென் பெண்ணையாற்றுக்கு சென்று தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆற்றின் கரையோரப் பகுதியில் சஞ்சய் இறந்து கிடப்பது தெரியவந்தது. அவருடைய உடலை பார்த்து குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இதுபற்றி தகவல் அறிந்த கோட்டப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து ஆற்றுக்கு குளிக்க சென்றபோது ஆற்று நீரில் மூழ்கி சஞ்சய் உயிரிழந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story