திருமங்கலம் அருகே முன் விரோதத்தில் வாலிபர் அடித்துக்கொலை தண்ணீர் தொட்டியில் பிணம் வீச்சு


திருமங்கலம் அருகே முன் விரோதத்தில் வாலிபர் அடித்துக்கொலை தண்ணீர் தொட்டியில் பிணம் வீச்சு
x
தினத்தந்தி 19 Aug 2023 7:45 PM GMT (Updated: 19 Aug 2023 7:46 PM GMT)

திருமங்கலம் அருகே முன் விரோதத்தில் வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மதுரை

திருமங்கலம்,


திருமங்கலம் அருகே முன் விரோதத்தில் வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மாட்டுப்பண்ணை

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியை சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மகன் மாரிச்சாமி (வயது 34). இவரது மனைவி பாக்கியலட்சுமி(28). இவர்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது. ஒரு மகன், மகள் உள்ளனர்.

திருமங்கலம் கள்ளிக்குடி அருகேயுள்ள அகத்தாபட்டியை சேர்ந்த பாலுசாமி என்பவர் சிவரக்கோட்டையில் மாட்டுப்பண்ணை வைத்துள்ளார். இந்த பண்ணையில் கார் டிரைவராக மாரிச்சாமி வேலை பார்த்து வந்தார். இதன் காரணமாக காரியாபட்டியில் இருந்த தனது வீட்டினை சிவரக்கோட்டை சூர்யா நகருக்கு மாற்றி குடும்பத்துடன் தற்போது குடியிருந்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல் மாரிச்சாமி மாட்டுப்பண்ணைக்கு வேலைக்காக புறப்பட்டு சென்றார். வழக்கமாக இரவு 8 மணிக்கு வீடு திரும்பிவிடுவார். ஆனால் நள்ளிரவு 12 மணி வரையிலும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றம் அடைந்த அவரது மனைவி பாக்கியலட்சுமி மாரிச்சாமியின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டார். ஆனால் அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

தண்ணீர் தொட்டியில் வீச்சு

இதையடுத்து மாரிச்சாமியின் மனைவி கள்ளிக்குடி போலீஸ் நிலையத்தில் கணவர் மாயமாகி விட்டதாகவும், அவரை கண்டுபிடித்து தருமாறும் புகார் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் அவர் வேலை பார்த்து வந்த மாட்டுப்பண்ணையில் விசாரணை நடத்தினர். அப்போது அங்கிருந்த இரவு நேர காவலாளி, இந்த பண்ணையில் பால்கறவை செய்யும் ஆறுமுகம், 3 வாலிபர்களுடன் வந்து சென்றதாக தெரிவித்தார்.

இதனால் சந்தேகமடைந்த போலீசார், பண்ணையின் உள்ளே சென்று தேடிபார்த்த போது அங்குள்ள தண்ணீர் தொட்டியில் மாரிச்சாமி பிணமாக கிடந்தார். போலீசார் அவரது உடலை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

விசாரணை

தகவல் அறிந்த திருமங்கலம் துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்த குமார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டார். பிணமாக கிடந்த மாரிச்சாமியின் நெற்றியில் காயம் இருந்தது. இதனால் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என சந்தேகம் அடைந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில், கள்ளிக்குடி அருகே வில்லூரை சேர்ந்த ஆறுமுகம் இதே பண்ணையில் பால் கறவை செய்யும் தொழில் செய்து வந்ததும், அவருக்கும் மாரிச்சாமிக்கும் முன்விரோதம் இருந்ததும் தெரிந்தது. இதன் காரணமாக ஆறுமுகம் தனது கூட்டாளிகளுடன் வந்து மாரிச்சாமியை அடித்து கொலை செய்து விட்டு, தண்ணீர் தொட்டியில் வீசிச் சென்றதும் தெரியவந்தது. இதைதொடர்ந்து தலைமறைவான ஆறுமுகம் மற்றும் அவரது கூட்டாளிகளை கள்ளிக்குடி போலீசார் தேடி வருகின்றனர்.

மாட்டுப்பண்ணையில் வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் திருமங்கலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தில் மாட்டுப்பண்ணை உரிமையாளருக்கும் தொடர்பு இருக்கலாம் என மாரிச்சாமி உறவினர்கள் புகார் தெரிவித்தனர். அந்த கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.


Next Story