குளித்தலை காவிரி ஆற்றில் மூழ்கி வாலிபர் பலி; அண்ணனின் கதி என்ன? தேடும் பணி தீவிரம்


வீரப்பூருக்கு சாமி கும்பிட சென்றபோது குளித்தலை காவிரி ஆற்றில் குளித்த வாலிபர் தண்ணீரில் மூழ்கி பலியானார். அவருடைய அண்ணனின் கதி என்ன ஆனது என்பது தெரியவில்லை. அவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கரூர்

சாமி கும்பிட...

திருப்பூர் மாவட்டம் கருவம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஜெயபாலன் (வயது 55). இவரது தந்தை நடேசன் ஏற்கனவே இறந்துவிட்டார். இதையடுத்து அவருக்கு திதி கொடுப்பதற்காக தனது சொந்த ஊரான திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள பாலசமுத்திரத்திற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜெயபாலன் தனது குடும்பத்தினருடன் வந்துள்ளார்.

இதேபோல் ஈரோடு அருகே உள்ள மாணிக்கம் பாளையம் பகுதியில் வசித்து வரும் ஜெயபாலனின் அண்ணன் ராமதாஸ் (63) தனது குடும்பத்தினருடன் பாலசமுத்திரத்திற்கு வந்துள்ளார். பின்னர் இவர்களது குடும்பத்தார் அனைவரும் மணப்பாறை அருகே உள்ள வீரப்பூர் பொன்னர் சங்கர் கோவிலில் சாமி கும்பிடுவதற்காக செல்ல திட்டமிட்டுள்ளனர்.

தண்ணீரில் மூழ்கினர்

அதன்படி நேற்று பாலசமுத்திரத்தில் இருந்து வேனில் புறப்பட்ட இவர்களது குடும்பத்தினர் குளித்தலை கடம்பந்துறை காவிரி ஆற்றில் குளித்துவிட்டு வீரப்பூர் செல்ல முடிவு செய்துள்ளனர். காவிரி ஆற்றில் குளித்தபோது ஜெயபாலனின் மகன்களான அருணாச்சலம் (25), வெங்கடாசலம் (22), ராமதாசின் மகன் ஹரிஷ் (22) ஆகிய 3 பேரும் காவிரி ஆற்றில் சற்று ஆழமான பகுதிக்கு சென்று உள்ளனர். அப்போது வெங்கடாசலம் தண்ணீரில் மூழ்கியுள்ளார். இதை பார்த்த ஹரிஷ் அவரை காப்பாற்ற முயன்றுள்ளார். அப்போது அருணாச்சலமும் தனது தம்பியை காப்பாற்ற சென்றபோது ஹரிஷ், அருணாச்சலத்தை ஆழமான பகுதிக்கு வர வேண்டாம் என தெரிவித்துவிட்டு தண்ணீரில் மூழ்கிய வெங்கடாசலத்தை மீட்டு கரைக்கு கொண்டு வந்துள்ளார்.

இதற்கிடையே எதிர்பாராதவிதமாக அருணாச்சலமும் தண்ணீரில் மூழ்கியுள்ளார். ஆனால் அவரை மீட்க முடியவில்லை. இதைப்பார்த்த அங்கிருந்த இளைஞர்கள் சிலர் தண்ணீரில் மூழ்கிய அருணாச்சலத்தை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அருணாச்சலம் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார்.

வாலிபர் பலி

இதையடுத்து முசிறி தீயணைப்பு நிலையத்திற்கும், குளித்தலை போலீசாருக்கும் தகவல் அளிக்கப்பட்டது. அதன்பேரில் அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள், போலீசார் தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்ட அருணாச்சலத்தை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இந்தநிலையில் தண்ணீரில் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்ட வெங்கடாசலத்தை அவரது உறவினர்கள் குளித்தலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி வெங்கடாசலம் பரிதாபமாக இறந்தார்.

இதையறிந்த இவரது உறவினர்கள் அரசு மருத்துவமனையில் கதறி அழுத காட்சி அங்கிருந்தவர்கள் மனதில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது. கண்முன்னே தனது சகோதரர் தண்ணீரில் மூழ்கி இறந்தது ஹரீசை மீளா துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஆர்.டி.ஓ. விசாரணை

பலியான வெங்கடாசலம் தொழிற்கல்வி படித்துஅருணாச்சலம் முடித்துள்ளார். ஹரிஷ் திருப்பதியில் உள்ள தனியார் கல்லூரியில் எல்.எல்.பி. படித்து வருகிறார். அருணாச்சலம் திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் குறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காவிரி ஆற்றில் மூழ்கிய அருணாச்சலத்தை குளித்தலை பகுதியில் உள்ள மீனவர்கள் உதவியுடன் பரிசலில் சென்று தீயணைப்பு வீரர்கள் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் காவிரி ஆற்று பகுதிக்கு வந்த குளித்தலை ஆர்.டி.ஓ. புஷ்பாதேவி இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார்.


Next Story