மின்னல் தாக்கி வாலிபர் பலி


மின்னல் தாக்கி வாலிபர் பலி
x

நெல்லை அருகே மின்னல் தாக்கி வாலிபர் பலியானார்.

திருநெல்வேலி

நெல்லை மாவட்டத்தில் தற்போது கோடை வெயில் கொளுத்தி வருகிறது. 100 டிகிரிக்கு மேல் வெயிலின் தாக்கம் உள்ளது. திடீரென்று கோடை மழையும், இடி, மின்னல் தாக்கமும் காணப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று நெல்லையை அடுத்த மானூர் அருகே உள்ள திருமலாபுரம் பகுதியில் திடீரென்று இடி, மின்னல் தாக்கியது. அப்போது அங்குள்ள ஒரு தோட்டத்தில் லோடு ஆட்டோவில் மிளகாய் மூட்டைகளை ஏற்றிக் கொண்டிருந்த துரைராஜ் மகன் சுரேஷ் (வயது 18), சாமிதுரை மகன் சுரேஷ் என்ற கார்த்திக் (28) மற்றும் முகேஷ் (17) ஆகிய 3 பேர் மீதும் மின்னல் தாக்கியதில் மயங்கி விழுந்தனர்.

அவர்கள் உடனடியாக ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் செல்லும் வழியிலேயே துரைராஜ் மகன் சுரேஷ் பரிதாபமாக இறந்தார். மற்ற 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.


Next Story