சிறுமி பலாத்கார வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை


சிறுமி பலாத்கார வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை
x

16 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு தீர்ப்பளித்தது.

புதுக்கோட்டை

பாலியல் பலாத்காரம்

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் காளிதாஸ் (வயது 29). இவர் 16 வயது சிறுமியான பிளஸ்-2 மாணவியிடம் கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் 19-ந் தேதி மாலை பள்ளியில் இருந்து வீடு திரும்பிய போது பேச முயன்றார். ஆனால் அந்த சிறுமி அவரிடம் பேசாமல் சென்றார்.

அன்றைய தினம் நள்ளிரவு வீட்டில் இருந்து சிறுமி வெளியே வந்த போது, அவரை அருகில் உள்ள கண்மாய் கரைக்கு கட்டாயப்படுத்தி அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தரப்பில் அறந்தாங்கி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து காளிதாசை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஆயுள் தண்டனை

இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கின் விசாரணையின் போது ஜாமீனில் வெளியே வந்த காளிதாஸ் கடந்த 2-11-2020 அன்று தலைமறைவானார். அவருக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்ட நிலையில் கடந்த 8-10-2022 அன்று கைது செய்யப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் கோர்ட்டில் வழக்கின் விசாரணை முடிவுற்ற நிலையில் நேற்று நீதிபதி சத்யா தீர்ப்பளித்தார். இதில் போக்சோ வழக்கில் காளிதாசுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.2 லட்சம் அபராதமும், கொலை மிரட்டல் விடுத்ததற்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார். அதன்படி அவர் ஆயுள் தண்டனையை அனுபவிக்க உள்ளார். இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பில் ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டார்.

திருச்சி சிறை

இதைத்தொடர்ந்து தண்டனை விதிக்கப்பட்ட காளிதாசை திருச்சி மத்திய சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் யோகமலர் ஆஜராகி வாதாடினார்.


Next Story