நீதிமன்ற அவமதிப்பு வழக்கு:நாமக்கல் கோர்ட்டில் யுவராஜ் ஆஜர்ஆகஸ்டு 25-ந் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு


நீதிமன்ற அவமதிப்பு வழக்கு:நாமக்கல் கோர்ட்டில் யுவராஜ் ஆஜர்ஆகஸ்டு 25-ந் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 24 July 2023 7:00 PM GMT (Updated: 24 July 2023 7:00 PM GMT)
நாமக்கல்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நேற்று நாமக்கல் கோர்ட்டில் யுவராஜ் ஆஜர் செய்யப்பட்டார். இதை தொடர்ந்து வழக்கு விசாரணை ஆகஸ்டு மாதம் 25-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்தவர் என்ஜினீயர் கோகுல்ராஜ் (வயது 23). இவர் கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக நாமக்கல் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீரன்சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்ளிட்ட 17 பேரை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணைக்காக யுவராஜை போலீசார் நாமக்கல் மாவட்ட முதன்மை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது கோர்ட்டில் நீதிபதி இளவழகனுக்கு எதிராக ஆவேசமாக பேசியதாக யுவராஜ் மீது கோர்ட்டு தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

ஆகஸ்டு 25-ந் தேதிக்கு ஒத்திவைப்பு

இந்த வழக்கு நாமக்கல் முதலாவது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. இதையடுத்து போலீசார் கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள யுவராஜை நாமக்கல் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது மாஜிஸ்திரேட்டு (பொறுப்பு) நந்தினி, வழக்கு விசாரணையை ஆகஸ்டு மாதம் 25-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இதேபோல் இவ்வழக்கில் மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ள யுவராஜின் கூட்டாளிகள் 5 பேர் மற்றும் ஜாமீனில் வெளியே வந்த 4 பேரும் நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதையொட்டி கோர்ட்டு வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.


Next Story