சின்னாறு-ஒகளூர் ஏரிகளில் தூர்வாரும் பணிகளை மண்டல தலைமை பொறியாளர் ஆய்வு


சின்னாறு-ஒகளூர் ஏரிகளில் தூர்வாரும் பணிகளை மண்டல தலைமை பொறியாளர் ஆய்வு
x

சின்னாறு-ஒகளூர் ஏரிகளின் வரத்து வாய்க்கால்களில் தூர்வாரும் பணிகளை மண்டல தலைமை பொறியாளர் ஆய்வு செய்யதார். இந்த பணிகளை 31-ந்தேதிக்குள் முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் 2023-24-ம் ஆண்டின் தமிழக அரசின் நீர் வளத்துறையின் சார்பில் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் ரூ.4 கோடி மதிப்பீட்டில் 39 பணிகள் 81.75 கி.மீ. தொலைவுக்கு தூர்வாரும் பணிகளுக்காக அரசு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டு கடந்த மாதம் 27-ந்தேதி முதல் பணிகள் தொடங்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை தமிழக அரசின் நீர் வளத்துறையின் திருச்சி மண்டல தலைமை பொறியாளர் ராமமூர்த்தி நேற்று மாலை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் சின்னாறு ஏரியின் வரத்து வாய்க்காலில் ரூ.15 லட்சம் மதிப்பில் 3.50 கிலோ மீட்டர் நீளத்திற்கு நடைபெறும் தூர்வாரும் பணிகளையும், ஒகளூர் ஏரியின் வரத்து வாய்க்காலில் ரூ.10 லட்சம் மதிப்பில் 4 கிலோ மீட்டர் நீளத்திற்கு நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் இந்த பணிகளை வருகிற 31-ந்தேதிக்குள் முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். முன்னதாக அவர் திட்ட பணிகளான ரூ.3 கோடியே 72 லட்சம் மதிப்பில் கோனேரிபாளையத்தில் நடைபெற்று வரும் தடுப்பணை பணிகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது நீர்வளத்துறையின் திருச்சி கண்காணிப்பு பொறியாளர் சுப்ரமணியன், அரியலூர் மருதையாறு வடி நில கோட்ட செயற்பொறியாளர் வேல்முருகன், பெரம்பலூர் உதவி செயற்பொறியாளர் சரவணன், உதவி பொறியாளர்கள் மருதமுத்து, தினகரன் மற்றும் அலுவலக பணியாளர்கள் உடனிருந்தனர்.


Next Story