காங்கிரஸ் வேட்பாளர் நேர்காணல் நிறைவடைந்த பின்னரே திமுகவுடன் பேச்சுவார்த்தை - கே.எஸ்.அழகிரி


காங்கிரஸ் வேட்பாளர் நேர்காணல் நிறைவடைந்த பின்னரே திமுகவுடன் பேச்சுவார்த்தை - கே.எஸ்.அழகிரி
x
தினத்தந்தி 6 March 2021 9:10 AM GMT (Updated: 6 March 2021 9:10 AM GMT)

காங்கிரஸ் வேட்பாளர் நேர்காணல் நிறைவடைந்த பின்னரே திமுகவுடன் பேச்சுவார்த்தை நடைபெறும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்படுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டத்தையடுத்து, ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் வேட்பாளர் தேர்வு, கூட்டணி, தொகுதி பங்கீடு, பிரசாரம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தியுள்ளது. இதனால் தமிழக அரசியல் களம் உச்சபட்ச பரபரப்பில் உள்ளது.

திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் - 3, மனிதநேய மக்கள் கட்சி - 2, விடுதலை சிறுத்தைகள் - 6, இந்திய கம்யூனிஸ்ட் - 6 ஆகிய தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவற்றிற்கு இன்னும் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இடையே நடைபெற்ற 2-ம் கட்ட பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. திமுக ஒதுக்குவதாக கூறும் தொகுதிகளின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார். 

மேலும், மார்க்சிஸ்ட் செயற்குழு கூட்டத்திற்கு பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். அதேபோல் திமுக - காங்கிரஸ் இடையேயான தொகுதி பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.    

இந்நிலையில், திமுக உடனான தொகுதி பங்கீட்டில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் காங்கிரஸ் சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் நேர்காணல் இன்று தொடங்கியது. தமிழக காங்கிரஸ் தலைமையிடமான சத்தியமூர்த்தி பவனில் நேர்காணல் நடைபெற்று வருகிறது.

இதனால், காங்கிரஸ் வேட்பாளர் நேர்காணல் நிறைவடைந்த பின்னரே திமுக உடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெறும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்தார். வேட்பாளர் நேர்காணல் 2 நாட்கள் (சனி, ஞாயிறு) நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வரும் திங்கட்கிழமை (8-ம் தேதி) திமுக-காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு தொடர்பான அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story