தமிழகத்தில் மறுவாக்குப்பதிவு எங்கும் நடைபெறாது - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு


தமிழகத்தில் மறுவாக்குப்பதிவு எங்கும் நடைபெறாது - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு
x
தினத்தந்தி 6 April 2021 3:58 PM GMT (Updated: 6 April 2021 3:58 PM GMT)

தமிழகத்தில் மறுவாக்குப்பதிவு எங்கும் நடைபெறாது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 234 சட்டசபை தொகுதிகளுக்கும் இன்று ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. தமிழகத்தில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 6 கோடியே 28 லட்சம் ஆகும். இதில் ஆண்கள் 3 கோடியே 9 லட்சம் பேர். பெண்கள் 3 கோடியே 19 லட்சம் பேர். இதுதவிர 3-ம் பாலினத்தவர் 7192 பேர். காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது முதலே வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர்.

கொரோனா அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு வழிகாட்டு நெறிமுறைகள் முன்பற்றப்பட்டு பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. அனைத்து வாக்காளர்களும் கண்டிப்பாக முககவசம் அணிந்து வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது. அதன்படி முககவசம் அணிந்து இருக்கிறார்களா என உறுதி செய்த பிறகே உள்ளே அனுமதித்தனர். அவ்வாறு முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கு வாக்குப்பதிவு மையத்திலேயே முககவசம் வழங்கப்பட்டது.

மாலை 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. மாலை 6 மணிக்கு மேல் 7 மணி வரை கொரோனா நோயாளிகள் வாக்களிக்க சிறப்பு நேரம் ஒதுக்கப்பட்டு இருந்தது. 7 மணியுடன் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது. ஓட்டுப்பதிவு முடிந்ததும் அனைத்து வாக்குப்பதிவு எந்திரங்களும் கட்சி ஏஜெண்டுகள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. அதன்பிறகு பலத்த பாதுகாப்புடன் ஓட்டு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவைகள் அறைகளில் பாதுகாப்பாக வைத்து சீல் வைக்கப்படும். அந்த இடத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில், தமிழக சட்டசபை தேர்தலில் தோராயமாக 71.79 சதவீத வாக்குகள் பதிவுவாகி உள்ளதாகவும், நள்ளிரவு 12 மணி அல்லது 1 மணி அளவில் அதிகாரப்பூர்வ வாக்குப்பதிவு எண்ணிக்கை தெரியவரும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சத்யபிரதா சாகு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது,

தமிழகத்தில் 71.79% வாக்குகள் பதிவாகியுள்ளது. இந்த சதவிகிதம் அதிகரிக்கலாம். முழு விவரம் நள்ளிரவு 12 மணி அல்லது 1 மணி அளவில் அதிகாரப்பூர்வ வாக்குப்பதிவு எண்ணிக்கை தெரியவரும். 

தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 78% வாக்குகள் பதிவாகியுள்ளது. அதற்கு அடுத்தபடியாக நாமக்கல் மாவட்டத்தில் 77.91% வாக்குகள் பதிவாகி இரண்டாம் இடத்தில் உள்ளது. மூன்றாம் இடத்தில் அரியலூர் மாவட்டம் 77.88% வாக்குகள் பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக சென்னை மாவட்டத்தில் 59.40% வாக்குகள் பதிவாகியுள்ளது. இந்த தரவுகள் தோராயமானவை தான். சட்டம்-ஒழுங்கை பொறுத்தவரை மிகப்பெரிய பிரச்சனைகள் எதுவும் இதுவரை வரவில்லை. நள்ளிரவுக்கு பிறகு முழுமையான வாக்குப்பதிவு விவரம் வெளியாகும். தமிழகத்தில் மறுவாக்குப்பதிவு எங்கும் நடைபெறாது’ என்றார்.   

Next Story