நாங்கள் வெற்றிபெற்றுவிட்டோம்.... பாஜக தோல்வியடைந்துவிட்டது - மம்தா பானர்ஜி பேச்சு


நாங்கள் வெற்றிபெற்றுவிட்டோம்.... பாஜக தோல்வியடைந்துவிட்டது - மம்தா பானர்ஜி பேச்சு
x
தினத்தந்தி 2 May 2021 1:09 PM GMT (Updated: 2 May 2021 1:09 PM GMT)

நாங்கள் 221-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றிபெற்றுவிட்டதாகவும், தேர்தலில் பாஜக தோல்வியடைந்துவிட்டதாகவும் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா,

மேற்குவங்காளத்தில் மொத்தமுள்ள 294 தொகுதிகளில் 292 தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதில், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், பாஜக கூட்டணி, இடதுசாரி - காங்கிரஸ் கூட்டணிகள் தேர்தலை சந்தித்தன.

தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. இதில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 213 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. பாஜக 78 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இடதுசாரிகள் எந்த தொகுதியிலும் முன்னிலையில் இல்லை. 

ஆட்சியை கைப்பற்ற 148 தொகுதிகள் தேவை என்ற போதில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 213 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இதன் மூலம் மேற்குவங்காளத்தில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியமைப்பது உறுதியாகியுள்ளது.

இந்நிலையில், திரிணாமுல் காங்கிரசின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகியுள்ள நிலையில் மம்தா பானர்ஜி செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது அவர் பேசியதாவது, இந்த மிகப்பெரிய வெற்றிக்கு மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக நான் உடனடியாக பணிகளை தொடங்க உள்ளேன். கொரோனா வைரஸ் பரவலை கருத்தில் கொண்டு பதவியேற்பு விழா ஆரவாரமின்றி சிறிய அளவில் நடைபெறும்.

பாஜக தேர்தலில் தோல்வியடைந்துவிட்டது. அவர்கள் மோசமான அரசியல் செய்தனர். இந்திய தேர்தல் ஆணையத்தின் கொடூரங்களை நாம் சந்தித்தோம். நந்திகிராமை பற்றி கவலைப்படவேண்டாம். ஒரு இயக்கத்தை எதிர்த்து நான் போராடியதால் நான் நந்திகிராமில் சிரமப்பட்டுள்ளேன். அது ஒன்றுமில்லை. 

நந்திகிராம் மக்கள் எந்த தீர்ப்பு வழங்கினாலும் நான் அதை ஏற்றுக்கொள்கிறேன். நாங்கள் 221-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றிபெற்றுவிட்டோம். தேர்தலில் பாஜக தோல்வியடைந்துவிட்டது’ என்றார்.

Next Story